விக்ரமை உயிர்த்தெழ வைக்கும் முயற்சிகளில் தொய்வு?
Recommended Video
பெங்களூர்: நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேன்டரை உயிர்ப்பிக்கும் முயற்சிகளில் தொய்வு எழுந்துள்ளதாக தெரிகிறது. அதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால் அடுத்த கட்ட நடவடிக்கைகளில் கவனம் செலுத்துமாறு இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு அதன் தலைவர் டாக்டர் கே. சிவன் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை நிலவில் இறங்குவதாக இருந்த விக்ரம் லேன்டர் கடைசி நேரத்தில் தொடர்பு துண்டிக்கப்பட்டது. அது என்ன ஆனது என்று தெரியாத நிலையில், நிலவின் பரப்பில் அது மோதி விழுந்திருந்ததை ஆர்பிட்டர் கண்டுபிடித்தது. அது வேகமாக போய் விழுந்துள்ளதாகவும், அதேசமயம், பெரிய அளவில் சேதம் இருக்க வாய்ப்பில்லை என்றும் இஸ்ரோ கூறியிருந்தது.
இதைத் தொடர்ந்து விக்ரம் லேன்டரை உயிர்ப்பித்து அதனிலிருந்து சிக்னலைப் பெறும் முயற்சிகள் தொடங்கின. பிரக்யான் ரோவரிலிருந்து சிக்னல் பெறும் முயற்சிகளும் ஒரு பக்கம் நடந்தன. ஆனால் அது எதற்குமே பயன் கிடைக்கவில்லை. அனைத்து முயற்சிகளுமே தோல்வியிலேயே முடிந்துள்ளன.
இன்னும் 14 நாட்களுக்கு மட்டுமே லேன்டர் இறங்கியுள்ள பகுதியில் சூரிய ஒளி இருக்குமாம். அதன் பிறகு கடும் பனியும், இருளும் சூழ்ந்து விடும். அதற்குள்ளாக பலன் கிடைத்தால்தான் உண்டு. இல்லாவிட்டால் எதுவும் செய்ய இயலாதாம்.
தற்போது பயலுலுவில் உள்ள 32 மீட்டர் ஆன்டென்னாவைப் பயன்படுத்தி இஸ்ரோ விக்ரம் லேன்டரை உயிர்த்தெழ வைக்கும் தனது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஆனால் வாய்ப்புகள் மிகவும் மங்கி வருவதால், அடுத்த கட்ட பணிகளில் கவனம் செலுத்துவோம் என இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு டாக்டர் கே.சிவன் அறிவுறுத்தியுள்ளதாக தெரிகிறது.
இருப்பினும் இதுவரை இதுதொடர்பாக இஸ்ரோவிடமிருந்து அதிகாரப்பூர்வமான எந்த அறிவிப்பும் வரவில்லை.