எடப்பாடி நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு.. உச்சநீதிமன்றத்திற்கு உதவ அட்டர்னி ஜெனரல் மறுப்பு
அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த மாஃபா பாண்டியராஜன் தொடர்ந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் மத்திய அரசு வழக்கறிஞராக சட்ட ஆலோசனை வழங்க முடியாது என்று அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தெரி
டெல்லி : ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜராகி வாதிட்டு வருவதால் நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கில் மத்திய அரசு சார்பில் சட்ட ஆலோசனைகள் வழங்க விருப்பமில்லை என்று அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார்.
தமிழக சட்டசபையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. இந்த வாக்கெடுப்பு செல்லாது என்று அறிவிக்கக் கோரி அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த பாண்டியராஜன் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தை, செல்லாதது என அறிவிக்க வேண்டும். நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது ரகசிய வாக்கெடுப்பு நடத்த வைக்கப்பட்ட வேண்டுகோளை பேரவைத் தலைவர் நிராகரித்திருக்க கூடாது என்ற அடிப்படையில், இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ரகசிய வாக்கெடுப்பு வழியாக புதிய நம்பிக்கை கோரும் தீர்மானம் சட்டசபையில் நிறைவேற்றப்பட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்றும் பாண்டியராஜன் கோரியிருந்தார்.
இந்த வழக்கின் மீது கடந்த செவ்வாய்க்கிழமை விசாரணை நடந்த போது நம்பிக்கை வாக்கெடுப்பை ரகசியமாக நடத்த முடியுமா என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் இது குறித்து ஜுலை 11-ம் தேதியன்று இந்த வழக்கை விசாரிப்பதாக தெரிவித்ததோடு சட்ட உதவிக்காக மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் வேணுகோபால், அன்றைய தினம் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் எனவும் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் அட்டர்னி ஜெனரல் வேணுகோபால் இந்த வழக்கில் தன்னால் சட்ட ஆலோசனைகள் வழங்க முடியாது என்று உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளார். ஏற்கனவே ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்டு வருவதால் இந்த வழக்கில் ஆஜராக விருப்பமில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதனால் இந்த வழக்கு விசாரணையில் மத்திய அரசு சார்பில் சொலிசிட்டர் ஜெனரல் ரஞ்சித் குமார் ஆஜராவார் என்று தெரிகிறது.