அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்... சிபிஐயிடம் ஒளிந்து விளையாடும் கிறிஸ்டியன் மைக்கேல்
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் லஞ்சம் வாங்கிய கிறிஸ்டியன் மைக்கேல் எங்கே இருக்கிறார் என துபாய் அரசு இன்னும் கூறவில்லை என்று சிபிஐ அமைப்பு தெரிவித்துள்ளது.
டெல்லி: அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழலில் லஞ்சம் வாங்கிய கிறிஸ்டியன் மைக்கேல் எங்கே இருக்கிறார் என துபாய் அரசு இன்னும் கூறவில்லை என்று சிபிஐ அமைப்பு தெரிவித்துள்ளது. இவரை இந்தியா கொண்டு வர சிபிஐ தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மன்மோகன் சிங் தலைமையிலான முந்தைய மத்திய காங்கிரஸ் ஆட்சி நிறைய ஊழல் புகாரில் சிக்கியது. இதில் மிக முக்கியமானது அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்.
அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடம் இருந்து ஹெலிகாப்டர் வாங்கியதில் ஊழல் நடந்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டது. இதனால் இந்த ஒப்பந்தம் 2014ல் ரத்து செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு பணம்
மொத்தம் 12 ஹெலிகாப்டர்களை ரூபாய் 3600 கோடிக்கு வாங்க மத்திய அரசு திட்டமிட்டது. இதில் பல்வேறு அதிகாரிகளுக்கு 430 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுக்கப்பட்டு இருக்கிறது என்றும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.
கிறிஸ்டியன் மைக்கேல் லஞ்சம்
இதில் அதிகம் லஞ்சம் வாங்கியது கிறிஸ்டியன் மைக்கேல் ஜேம்ஸ் என்று கூறப்படுகிறது. இடைத்தரகரான இவர் தற்போது துபாயில் உள்ளார். இவர் மட்டும் ரூ.225 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இவர் இல்லாமல் இன்னும் இரண்டு பேர் லஞ்சம் வாங்கியுள்ளனர்.
நாடுகடத்த ஆணை
இந்த நிலையில் இண்டர்போல் உதவியுடன் இவர் துபாயில் கைது செய்யப்பட்டார். இவரை நாடு கடத்தவும் இந்திய அரசு அனுமதி கோரி இருந்தது. இந்த நிலையில் இவரை இந்தியாவிற்கு நாடு கடத்தலாம் என்று துபாய் கோர்ட் அனுமதி அளித்தது.
தகவல் இல்லை
இந்த நிலையில்தான் இவர் காணாமல் போய் இருப்பதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் எங்கே இருக்கிறார், காணாமல் போய்விட்டாரா, கஸ்டடியில் இருக்கிறாரா என்று தெரியவில்லை என்று சிபிஐ கூறியுள்ளது. இதுகுறித்து துபாய் அரசு அதிகாரப்பூர்வ தகவலை அளிக்கவில்லை என்றுள்ளது.