காலில் 'அம்மன்' டாட்டூ வரைந்த ஆஸ்திரேலியரிடம் மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கிய பெங்களூர் போலீஸ்
பெங்களூர்: காலில் அம்மன் உருவப்படத்தை பச்சைகுத்திய ஆஸ்திரேலிய வாலிபர் மற்றும் அவரது காதலி பொதுமக்களால் மிரட்டப்பட்டு காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்ட சம்பவம் பெங்களூரில் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரை சேர்ந்தவர் மேட் கெய்த் (21). சட்ட கல்லூரி மாணவரான அவர், காதலி எமிலியுடன் பெங்களூர் வந்திருந்தார். உள்ளூர் நண்பர் அபிஷேக்குடன் சேர்ந்து, நேற்று மதியம், எம்.ஜி.ரோடு பகுதியிலுள்ள ஒரு ரெஸ்டாரண்டில் சாப்பிட்டுக்கொண்டிருந்தனர்.
அப்போது, ரெஸ்டாரண்டுக்கு வந்த பெங்களூரை சேர்ந்த சில நண்பர்கள், கெய்த் காலில் கர்நாடகாவில் எல்லம்மா (துர்கையின் வடிவம்) என்று பரவலாக வணங்கப்படும் அம்மனின் உருவத்தை பச்சைகுத்தி வைத்திருந்ததை பார்த்து ஆத்திரமடைந்தனர்.
இதையடுத்து கெய்த் மற்றும் அவரது சகாக்களுடன் உள்ளூர்க்காரர்கள் வாக்குவாதம் செய்தனர். போன் செய்து தகவலை தெரிவித்து மேலும் பல நண்பர்களையும் வரவைத்தனர். டாட்டுவை அகற்றாவிட்டால், தோலை உரித்து எடுக்க வேண்டியிருக்கும் என உள்ளூர்க்காரர்கள் மிரட்டியுள்ளனர். வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர்.
விசாரணை நடத்தியபோது, மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் காலில், அம்மன் படத்தை கெய்த் பச்சைகுத்தியதற்கு, உள்ளூர்க்காரர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தனர். அவர் மீது வழக்கு பதிவு செய்ய கோரினர். ஆனால், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர் என்பதால் கெய்த் மீது வழக்குப்பதிவு செய்வதை தவிர்த்த போலீசார், மன்னிப்பு கடிதம் எழுதி வாங்கி அனுப்பி வைத்தனர்.
இதனிடையே, இந்து கடவுள்கள் மீது தனக்கு மிகுந்த பக்தியுள்ளதாக கூறியுள்ள கெய்த், தனது முதுகில் பெரிய விநாயகர் உருவத்தை பச்சை குத்தியுள்ளதாகவும் விளக்கம் தெரிவித்துள்ளார். கெய்த்தை குற்றவாளி போல நடத்தியது தவறு என ஊடகங்களில் கண்டன குரல்கள் எழ தொடங்கியுள்ளன.