குஜராத் வியாபாரியின் கப்பலில் ரூ1600 கோடி மதிப்பிலான ஹெராயின்- மடக்கிய ஆஸி. கடற்படை!!
அகமதாபாத்: குஜராத் வியாபாரிக்கு சொந்தமான கப்பலில் ரூ1600 கோடி மதிப்பிலான ஹெராயின் போதைப் பொருளை ஆஸ்திரேலிய கடற்படை கப்பல் மடக்கிப் பிடித்துள்ளது.
குஜராத் மாநிலம் மலாயா என்ற இடத்தை சேர்ந்த ஹாஜி பஷீர் என்ற வியாபாரி ஒரு கப்பலை ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வாடகையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வாங்கினார். கடந்த மார்ச் மாதம் 4-ந் தேதி அந்த கப்பல் குஜராத்தின் டுனா துறைமுகத்தில் இருந்து துபாய்க்கு புறப்பட்டது.
பல்வேறு நாடுகளுக்கு சென்ற பின்னர் அக் கப்பல் கென்ய கடற்பரப்பில் கடந்த ஏப்ரல் 23-ந் தேதி சென்று கொண்டிருந்தபோது ஆஸ்திரேலிய கப்பல் படையினர் அதை மடக்கி சோதனையிட்டனர்.
அப்போது கப்பலில் 1023 கிலோ ஹெராயின் போதைப் பொருள் 46 சிமெண்டு மூட்டைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அதன் சர்வதேச சந்தை மதிப்பு ரூ.1600 கோடி. அதனை அவர்கள் கைப்பற்றினார்கள்.
அக் கப்பல் பல நாடுகளுக்கு சென்றுள்ளதால் மூட்டை மூட்டையாக போதைப் பொருள் எங்கு ஏற்றப்பட்டது என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.