அவதார் நகைக் கடைகள் மூடல்? பிராண்ட் அம்பாசிடர் மம்முட்டிக்கு சிக்கல்?
திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள அவதார் தங்க நகைக்கடைகள் வாடிக்கையாளர்களிடம் பணத்தை வாங்கிவிட்டு கடைகளை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் நடிகர் மம்மூட்டிக்கு பிரச்சனை ஏற்படுமோ என ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.
கேரள மாநிலம் திருச்சூரில் அவதார் தங்கம் மற்றும் வைர நகை மாளிகை உள்ளது. அந்த கடையின் பிராண்ட் அம்பாசிடராக இருப்பவர் நடிகர் மம்மூட்டி. கடையை திறந்து வைத்தவரே அவர் தான். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகள் உள்ளது.
வாடிக்கையாளர்கள் பலர் அந்த நகைக்கடைகளில் தங்கத் திட்டங்களில் முதலீடு செய்துள்ளனர். பலர் நகை வாங்க மாதாமாதம் பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில் அந்த கடைகள் திடீர் என மூடப்பட்டுவிட்டதாக உள்ளூர் ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளது.
உரிமையாளர் வாடிக்கையாளர்களின் பணத்தோடு எஸ்கேப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடையின் பிராண்ட் அம்பாசிடரான மம்மூட்டிக்கு பிரச்சனை வருமோ என அவரின் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் தங்களின் கவலையை தெரிவித்துள்ளனர்.
முன்னதாக மேகி நூடுல்ஸ் பிரச்சனை ஏற்பட்டபோது ஒரு காலத்தில் அந்த விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன் மீது வழக்கு தொடரப்பட்டது. அது போன்று மம்மூட்டிக்கும் பிரச்சனை வந்துவிடுமோ என ரசிகர்கள் கவலையில் உள்ளனர்.