பட்டும் படாமல் தொட்டும் தொடாமல்.. எட்டி நின்று ஹோலி கொண்டாடுங்க... டாக்டர்கள் அட்வைஸ்!
டெல்லி: ஹோலி பண்டிகையைக் கொண்டாடும் போது மக்கள் முடிந்தவரை மற்றவர்களைத் தொடாமல் இருப்பது நல்லது என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
வசந்தகாலத்தை வண்ணப் பொடிகள் தூவி வரவேற்கும் வகையில், இன்று நாடு முழுவதும் கோலாகலமாக ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஹோலி பண்டிகையின் போது மக்கள் அதிகமாகக் கூடும் இடங்களில் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பிருக்கிறது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
ஏற்கனவே நாடு முழுவதும் பன்றிக் காய்ச்சல் பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. எனவே, பன்றிக் காய்ச்சல் பரவலைத் தடுக்கும் வகையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டு வருகின்றன.
இந்நிலையில், இன்று ஹோலி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப் பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையின் போது வண்ணப் பொடிகளைத் தூவி, இனிப்புகள் வழங்கிக் கொண்டாடும் மக்கள், முடிந்தவரை மற்றவர்களிடமிருந்து இடைவெளியை ஏற்படுத்தி தங்களைப் பாதுகாத்துக் கொள்வது நல்லது என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
வசந்தத்திற்கு வரவேற்பு...
மரபு சார்ந்த பண்டிகைகளில் ஒன்றான ஹோலி, இளைஞர்களைக் கவர்ந்த பண்டிகைகளில் ஒன்று என்றால் மிகையில்லை. ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம் என இந்த விழாவை அவர்கள் கொண்டாடித் தீர்க்கின்றனர்.
விழாக்கோலம்...
ஹோலி பண்டிகையைக் கொண்டாட என்று வெளிநாட்டினர் பலர் கொல்கத்தாவிற்கு வந்துள்ளனர். இதனால் அந்நகரமே விழாக் கோலம் பூண்டுள்ளது.
எச்சரிக்கை...
இந்நிலையில், ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்தின் போது மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்வது கொஞ்சம் எச்சரிக்கையாகவும் இருக்கும் படி டாக்டர்கள் அறிவுரை கூறுகின்றனர். ஏனெனில் காற்றின் மூலம் பரவும் பல நோய்கள் இது போன்ற சமயங்களில் எளிதாக பரவும் என அவர்கள் எச்சரிக்கின்றனர்.
நோய் பரவும் அபாயம்...
அதிக மக்கள் கூடும் இடங்களில் நோய்த் தொற்றுக்கு ஆளான ஒரு நபர் வந்தாலே, அவர் மூலம் மற்றவர்களுக்கும் நோய் விரைவாக பரவும் அபாயம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே, முடிந்தவரை மற்றவர்களைத் தொடாமல் பாதுகாப்பாக ஹோலியைக் கொண்டாடும் படி அவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
பாதுகாப்பு முக்கியம்...
ஏனெனில் இதன் மூலம் தேவையற்ற நோய்த் தொற்றுதலுக்கு ஆளாவதைத் தடுக்கலாம், பண்டிகையையும் மகிழ்ச்சியாகக் கொண்டாடலாம் என அவர்கள் கூறுகின்றனர்.