டெல்லி முன்னாள் சட்ட அமைச்சர் தோமரின் 'பி.எஸ்.சி. டிகிரியும்' டுபாக்கூராம்...!
ஃபைசாபாத்: போலி சட்டக் கல்வி சான்றிதழ் சமர்ப்பித்ததாக கைது செய்யப்பட்ட டெல்லி மாநில சட்டத்துறை முன்னாள் அமைச்சர் ஜிதேந்திரசின் தோமரின் பி.எஸ்.சி. கல்வி சான்றிதழும் போலியானதுதான் என்று உத்தரப்பிரதேசத்தின் ஃபைசாபாத் பல்கலைக் கழகம் தெரிவித்துள்ளது.
டெல்லி சட்டத்துறை அமைச்சராக இருந்தவர் ஜிதேந்திரசிங் தோமர். இவர் பார் கவுன்சிலில் சட்டக் கல்வி பயின்றதாக கூறி தாக்கல் செய்த சான்றிதழ்கள் போலியானவை என கூறி வழக்கு தொடரப்பட்டது. பார் கவுன்சிலும் இது தொடர்பாக புகார் கொடுத்திருந்தது.
அத்துடன் ஜிதேந்திரசிங் தோமர் சட்டக் கல்வி பயின்றதாக கூறிய பல்கலைக் கழகமும் அவரது சான்றிதழ் போலியானது எனக் கூறியது. இந்த நிலையில் ஜிதேந்திரசிங் தோமரை டெல்லி போலீசார் நேற்று கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து தோமர் தமது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் காசியாபாத்தைச் சேர்த பிரதீப்குமார் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பைசாபாத் ராம்மனோகர் லோகியா பல்கலைக் கழகத்துக்கு ஒரு மனுவை அனுப்பியிருந்தார். அதில் ஜிதேந்திரசிங் தோமரின் பி.எஸ்.சி. சான்றிதழ் உண்மையானதா எனக் கேட்டு இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள அப்பல்கலைக் கழகம் ஜிதேந்திரசிங் தோமரின் பி.எஸ்.சி. சான்றிதழ் போலியானது என்று தெரிவித்துள்ளது. இந்த விவகாரத்தை கையிலெடுத்துள்ள ஆம் ஆத்மியின் அதிருப்தி குழுவினராகிய ஆம் ஆத்மி சேனாவினர் டெல்லி முழுவதும் கேஜ்ரிவால் அரசுக்கு எதிராக போஸ்டர்களை ஒட்டியுள்ளனர்.
அத்துடன் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.
மிஸ்டர் தோமர்.. எல்லாமே பொய்யா?