ஜல்லிக்கட்டுக்கு எதிரான வழக்கு- அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் தடை!
ஜல்லிக்கட்டுக்கு எதிராக வக்கீல் அஞ்சலி சர்மா வழக்கு தொடர விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.
டெல்லி: தமிழக அரசின் ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக வழக்கு தொடர வழக்கறிஞர் அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் அதிரடி தடை விதித்துள்ளது.
ஜல்லிக்கட்டு நிரந்தரமாக நடைபெற வகை செய்யும் மசோதா தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டம் ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜல்லிக்கட்டு மசோதாவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பீட்டாவின் பங்காளி அமைப்பான கியூப்பா, விலங்குகள் நல வாரிய உறுப்பினர் அஞ்சலி சர்மா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்துள்ளனர்.
ஆனால் விலங்குகள் நல வாரியத்திடம் கேரளா தெருநாய்கள் தொடர்பாக வழக்கு தொடர அனுமதி வாங்கிவிட்டு ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர்ந்துள்ளார் அஞ்சலி சர்மா என்பது சர்ச்சை. இதனால் ஜல்லிக்கட்டு வழக்கை வாபஸ் பெற அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரிய செயலர் ரவிக்குமார் உத்தரவிட்டிருந்தார்.
அஞ்சலி சர்மாவோ தாம் வழக்கை வாபஸ் பெற முடியாது என திட்டவட்டமாக கூறிவிட்டார். இதனால் தற்போது ஜல்லிக்கட்டுக்கு எதிராக வழக்கு தொடர அஞ்சலி சர்மாவுக்கு விலங்குகள் நல வாரியம் தடை விதித்துள்ளது.