நொய்டா ஆக்சிஸ் வங்கியில் ஐடி ரெய்டு: 20 போலி கணக்குகளில் ரூ.60 கோடி பறிமுதல்
நொய்டா: நொய்டாவில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியதில் ரூ. 60 கோடி பணம் இருந்த 20 போலி கணக்குகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
நொய்டா செக்டர் 51ல் இருக்கும் ஆக்சிஸ் வங்கிக் கிளையில் 20 போலி நிறுவனங்களின் கணக்குகளில் பணம் போடப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அந்த வங்கிக் கிளைக்கு இன்று சென்று அதிரடி சோதனை நடத்தினர். சோதனையில் போலி கணக்குகளில் ரூ.60 கோடி அளவுக்கு பணம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
முன்னதாக டெல்லி சாந்தினி சவுக்கில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.100 கோடி அளவுக்கு பழைய நோட்டுகள் 44 போலி கணக்குகளில் முதலீடு செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த ரூ.100 கோடி கடந்த நவம்பர் மாதம் 8ம் தேதியில் இருந்து முதலீடு செய்யப்பட்டது தெரிய வந்தது. ஆக்சிஸ் வங்கிக் கிளைகளில் இதுவரை இரண்டு முறை சோதனை நடத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.