அயோத்தி அருகே.. 5 ஏக்கர் நிலப்பரப்பில் அமைகிறது மசூதி.. மரம் நடுதலுடன் ஜன.26ல் துவக்க விழா!
அயோத்தி: அயோத்தி அருகே, 5 ஏக்கர் நிலப்பரப்பில் புதிய மசூதி கட்டும் பணிகள் குடியரசு தினத்தன்று நடைபெறுகிறது.
அயோத்தி ராம ஜென்ம பூமி வழக்கில், 2019ம் ஆண்டு, நவம்பர் மாதம் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. வழக்கு தொடர்புடைய, 2.77 ஏக்கர் இடத்தில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இஸ்லாமிய தரப்புக்கு, ராமர் கோவில் கட்டும் இடத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவிலுள்ள இடத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கீடு செய்யவும் அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருந்தது.
கடந்த வருடம், ராமர் கோவில் கட்ட பூமி பூஜை நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் பங்கேற்றனர்.
அயோத்தி ராமர் கோயில்... இரண்டு நாள்களில் ஆயிரம் கோடி ரூபாய் நன்கொடை வசூல்
இந்த நிலையில், ஜனவரி 26ம் தேதி குடியரசு தினத்தன்று, மசூதி கட்டும் பணி துவங்குகிறது. இதைக் குறிக்கும் வகையில் மர மரக்கன்றுகள் நடுதல் மற்றும் தேசியக் கொடியேற்றுதல் ஆகிய நிகழ்வுகள் நடைபெற உள்ளன.
இந்தோ-இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை (ஐ.ஐ.சி.எஃப்), இதற்கான திட்டங்களை வகுத்துள்ளது. ஜனவரி 26 காலை 8:30 மணிக்கு விழா நடைபெறுகிறது.
வெளிநாட்டிலிருந்து மசூதி கட்ட பெறப்படும் நிதிக்கு, வருமான வரித்துறை அனுமதியளிப்பதில் கால தாமதம் ஏற்பட்டு வருவது போன்ற விஷயங்கள் குறித்து, மசூதி கட்டுமானத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள 9 உறுப்பினர்கள் அடங்கிய அறங்காவல் குழு நேற்று ஆலோசனைக் கூட்டம் நடத்தி விவாதித்துள்ளது.