தேசியக்கொடி ஏற்றி துவங்கப்பட்ட அயோத்தி மசூதி கட்டும் பணி
அயோத்தி : உத்திர பிரதேச மாநிலம் அயோத்தியில், தேசியக் கொடியை ஏற்றிய பிறகு, வழக்கமான நடைமுறைக்கு பிறகு அயோத்தியில் மசூதி கட்டும் பணி துவங்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி அயோத்தியில் ஒதுக்கப்பட்ட 5 ஏக்கர் நிலத்தில் மசூதி கட்டும் பணி இன்று துவங்கி உள்ளது. நாட்டின் 72 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலில் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. பிறகு மரக்கம்பம் நடப்பட்டு, மசூதி கட்டுவதற்கான பணியை துவக்கி உள்ளனர்.
அயோத்தியின் தின்னிபூர் கிராமத்தில் உள்ள 5 ஏக்கர் நிலத்தில் இந்த மசூதி கட்டப்பட்டு வருகிறது. ராம ஜென்மபூமியில் ராமர் கோயில் அமைய உள்ள இடத்தில் இருந்து இது 25 கி.மீ., தொலைவில் உள்ளது. இந்திய இஸ்லாமிய கலாச்சார அறக்கட்டளை சார்பில் மசூதி கட்டும் பணிகள் நடத்தப்படுகிறது.
காலை 8.45 மணிக்கு அறக்கட்டளையின் தலைவர் ஜாபர் அகமது பரூக்கி முறைப்படி கட்டுமான பணியை துவக்கி வைத்தார். அறக்கட்டளையின் 12 உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் உடன் இருந்தனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பரூகி, மண் சோதனையுடன் இப்பணியை நாங்கள் துவக்குகிறோம். மசூதிக்கான தொழில்நுட்ப பணிகளும் துவங்கப்பட்டுள்ளன.
மண் சோதனை செய்யப்பட்டு, முடிவுகள் வந்த உடன் வரைபடம் ஒப்புதல் பெறப்பட்ட பிறகு கட்டுமான பணிகளை துவங்குவோம். மசூதிக்காக நிதி திரட்ட உள்ளோம். மக்கள் ஏற்கனவே தங்களின் பங்களிப்பை அளிக்க தவங்கி விட்டனர் என்றார். முற்றிலும் கண்ணாடியால் ஆன மசூதியின் மாதிரி வடிவம் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.