அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவருக்கு கொரோனா.. பிரதமர் மோடியுடன் பூமி பூஜை விழாவில் பங்கேற்றவர்
அயோத்தி: அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரானா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைபெற்ற ராமர் கோவில் பூமி பூஜை விழாவில் பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரே மேடையில் பங்கேற்றவர் இவராகும்.
கொரானா பரவல் காரணமாக ராமர் கோவில் பூமிபூஜை விழாவின் போது குறைந்த விஐபிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். இதில் பங்கேற்றவர்களுக்கு, முன்கூட்டியே கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டன.
இதில் சில நிர்வாகிகளுக்கு, கொரானா வைரஸ் பாதிப்பு இருந்ததால், அவர்களுக்கு விழாவில் பங்கேற்பதற்கு அனுமதி கிடைக்கவில்லை. பாதிப்பு இல்லை என்று உறுதி செய்யப்பட்டவர்கள் மட்டும் இதில் பங்கேற்றனர்.
15 கி.மீ ஒலிக்கும்.. 2.1 டன் எடை.. அயோத்தி ராமர் கோயில் மணியை உருவாக்கிய இந்து- முஸ்லீம் நண்பர்கள்
கொரொனா பாதிப்பு
இந்த நிலையில்தான் ராம ஜென்மபூமி அறக்கட்டளை தலைவர் நிருத்திய கோபால் தாஸுக்கு, கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது இன்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அறிகுறிகள் இருந்ததை அடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியபோது, இந்த தகவல் தெரியவந்தது.
அறக்கட்டளை
ராமர் கோவில் பூமி பூஜை கடந்த 5ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில் ஒரு வாரம் கழித்து தற்போது அறக்கட்டளை தலைவருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒருவேளை, பூமி பூஜையின்போதே, இவருக்கு கொரோனா பாதிப்பு இருந்திருந்தால், அது பிறருக்கு பரவும் வாய்ப்பை மறுக்க முடியாது என்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
யாரெல்லாம் பங்கேற்றனர்
பிரதமர் நரேந்திர மோடி, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், ஆளுநர் ஆனந்திபென் பட்டேல், ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் ஆகியோர் நிருத்திய கோபால் தாஸுடன் ஒரே மேடையில் வீற்றிருந்தனர். மேலும் அங்கு நடைபெற்ற பல நிகழ்ச்சிகளில் அருகருகே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Recommended Video
தீர்ப்பு
அயோத்தி ராமர் பிறந்த இடம் என்று இந்துக்களால் நம்பப்படுகிறது. 1992 ஆம் ஆண்டு டிசம்பரில், இங்கு இருந்த 16 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதி கரசேவகர்களால் இடிக்கப்பட்டது. சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலப்பகுதியை இந்து முஸ்லீம் என இரு தரப்பும் உரிமை கொண்டாடிய நிலையில், கடந்த ஆண்டு உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பளித்தது. ராமர் கோவிலை கட்டிக்கொள்ளலாம் என்று நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.