அயோத்தியில் 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும்.. விஷ்வ இந்து பரிஷத்
அஹமதாபாத்: 60 சதவீத தூண்கள் தயாராக இருப்பதாகவும் அயோத்தியில் வரும் 2024ம் ஆண்டிற்கள் ராமர் கோயில் கட்டி முடிக்கப்படும் என்றும் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவ கோக்ஜி நம்பிக்கை தெரிவித்துள்ளார்
அயோத்தியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அடுத்து விஷ்வ இந்து பரிஷத் அமைப்பின் சர்வதேச தலைவர் சதாசிவ கோக்ஜி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறுகையில், ''உச்ச நீதிமன்ற தீர்ப்பால் யாருக்கும் வெற்றி, தோல்வி என்ற கேள்விக்கே இடம் கிடையாது. நூற்றாண்டுகால பிரச்னை சுமூகமாக தீர்த்து வைத்துள்ளது உச்ச நீதிமன்றம். இந்த தீர்ப்பு வரவேற்கப்பட வேண்டிய தீர்ப்பு. ராம ஜென்ம நிவாஸ் ஏற்கனவே தயாரித்துள்ள வடிவமைப்பின்படி ராமர் கோயில் பிரமாண்டமாக கட்டி முடிக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.
சர்ச்சைக்குரிய நிலத்தில் ராமர் கோவில்..முஸ்லிம்களுக்கு மசூதி கட்ட 5 ஏக்கர் வேறு இடம்: சுப்ரீம்கோர்ட்
கோயில் பணிகள்
கோயிலுக்கான நிறைய பணிகள் முடிக்கப்பட்டு உள்ளது. 2 தளத்திற்கான பணிகள் நிறைவடைந்துள்ளது.. ராமர் கோயில் பணிக்கான 60 சதவீத தூண்கள் தயார் நிலையில் உள்ளன.
கட்டுவதும் சவால்
நிலத்தை பெறுவது எவ்வளவு சவாலாக இருந்ததோ, அதே அளவுக்கான சவால் இக்கோயிலை கட்டி முடிக்கவும், அதை நிர்வாகம் செய்வதிலும் இருக்கும். 2024ம் ஆண்டுக்குள் ராமர் கோயில் கட்டப்பட்டு விடும் என நம்புகிறேன்'' என்றார்.
30 ஆண்டுகள் பணி
அயோத்தி ராம ஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டுவதற்காக கடந்த 1985ல் விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு சார்பில் ராம் ஜென்மபூமி நிவாஸ் குழு அமைக்கப்பட்டிருக்கிறது. விஷ்வ இந்து பரிஷத் அமைப்பு ராமர் கோயில் கட்டுவதற்காக அயோத்தி நகரிலேயே கல் செதுக்கும் பணியினை 30 ஆண்டுகளாக செய்து வருகிறது. தீர்ப்பை ஒட்டி தற்காலிமாக நிறுத்தி வைத்து இருந்தது.
1.75 லட்சம் கற்கள் தேவை
அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்காக இதுவரை 1.25 லட்சம் கற்களை அந்த அமைப்பு செதுக்கி உள்ளது. இது கீழ்தளத்திற்கு சரியாக இருக்கும் என்றும் மேல்தளம் மற்றும் முழுமையாக கட்டி முடிக்க 1.75 லட்சம் கற்கள் தேவை என்றும் அண்மையில் விஹெச்பி அமைப்பு கூறியிருந்தது.