அயோத்தி தீர்ப்பு: ராமர் கோவில் கட்ட 27 ஆண்டுகளாக விரதம் இருந்து வந்த 81 வயது மூதாட்டி
Recommended Video
போபால்: அயோத்தியில் ராமர் கோயில் கட்ட 27 ஆண்டுகளாக உணவு உண்ணாமல் பால், பழம் மட்டுமே உணவாக எடுத்து கொண்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த ஆசிரியை ஒருவர் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அடுத்து உண்ணாவிரதத்தை நிறைவு செய்யவுள்ளார்.
மத்திய பிரதேச மாநிலம், ஜபல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஊர்மிளா சதுர்வேதி. இவருக்கு தற்போது வயது 81 ஆகிறது. சமஸ்கிருத ஆசிரியையாக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
இவர் அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வேண்டும் என்ற வேண்டுதலுடன் விரதம் இருக்க முடிவு செய்தார். அதன்படி பாபர் மசூதி இடிக்கப்பட்ட 1992-ஆம் ஆண்டு முதல் விரதம் மேற்கொண்டு வருகிறார்.
அயோத்தியில் நீராடும் 5 லட்சம் பேர்.. களைகட்டும் கார்த்திகை பூர்ணிமா.. பலத்த பாதுகாப்பு!
54 வயது
சுமார் 27 ஆண்டுகளாக பால், பழம் ஆகியவற்றை மட்டுமே உண்டு வருகிறார். உணவை அவர் அருந்தவே இல்லை. அவரது 54 ஆவது வயதிலிருந்து அவர் விரதம் மேற்கொள்கிறார்.
கலவரம்
இதுகுறித்து அந்த ஆசிரியையின் மகன் கூறுகையில், என் அம்மா தீவிர ராமர் பக்தையாவார். கடந்த 1992-ஆம் ஆண்டு பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது கலவரம் ஏற்பட்டது. இந்த கலவரத்தால் மனஉளைச்சல் அடைந்தார்.
வயது
அப்போது அவருக்கு 54 வயது இருந்தது. அன்றிலிருந்து அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் வரை பால், பழம் மட்டுமே உணவாக சாப்பிட்டு வருகிறார். மேலும் உணவை உட்கொள்வதே இல்லை. நாங்கள் வயதை காரணம் காட்டி எவ்வளவோ சொல்லி பார்த்துவிட்டோம். அவர் கேட்கவில்லை.
உச்சநீதிமன்ற தீர்ப்பு
கடந்த சனிக்கிழமை அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியது. இது கேள்விப்பட்ட எனது தாய் அளவிலா மகிழ்ச்சி அடைந்தார். தீர்ப்பு வழங்கிய சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்க்கு நன்றி தெரிவித்து கடிதம் எழுதுமாறு என்னிடம் கூறினார்.
விழா எடுத்து முடித்து வைக்க திட்டம்
எனது தாயின் விரதம் ஒரு வழியாக நிறைவேறியதால் அவரது விரதத்தை விழா நடத்தி நிறைவுபெற செய்வோம் என அவருடைய மகன் தெரிவித்தார். 81 வயதாகும் ஆசிரியை ராமர் மீது இருந்த அதீத பக்தி காரணமாக 27 ஆண்டுகளாக உண்ணாவிரதம் இருந்தது அப்பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.