அயோத்தி தீர்ப்பு, இந்திய அரசியல், சமூகத்தை கட்டமைக்கப்போகிறது.. அமெரிக்க ஊடகங்கள்
டெல்லி: அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக பரப்பை வடிவமைக்கும் என்று அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
வழக்கின் வரலாற்று பின்புலத்தை வைத்து பார்த்தால், இந்த வழக்கின் முடிவு இந்தியாவின் அரசியல் மற்றும் சமூக தோற்றத்தை வடிவமைக்க உதவும் என்று வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிக்கை தெரிவித்துள்ளது. இந்த வழக்கை ஆரம்பம் முதலே தொடர்ந்து கவனித்து வருவது இந்த பத்திரிக்கை.
தீர்ப்பைப் பற்றி செய்தி வெளியிட்டுள்ள பிர பெரும்பாலான அமெரிக்க ஊடகங்கள், இந்திய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்சின் தீர்ப்பு ஒருமனதாக இருந்ததை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளன.
இந்தியாவுக்கு புதிய கோவில்கள், தேவாலயங்கள், மசூதிகள், குருத்வாராக்கள் தேவை இல்லை- கார்த்தி சிதம்பரம்
காக்கி காவல்
இதுதொடர்பாக நாடு முழுவதும் போடப்பட்ட உச்சபச்ச பாதுகாப்பு குறித்தும், அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மத்திய ராணுவ படைகள், உளவு அமைப்புகள் மற்றும் மாநில போலீஸார் நாடு முழுவதும் உஷார்படுத்தப்பட்டிருந்தனர்.
'காக்கி'யில் ஆண்களும் பெண்களும் அதிகமாக இருந்தனர், சமூக ஊடக தளங்கள் கண்காணிக்கப்பட்டன, என்று அவை செய்தி வெளியிட்டுள்ளன.
ராமர் சிலை
வால் ஸ்ட்ரீட் ஜர்னல், இதுபற்றி கூறுகையில், நீதிமன்றம் தனது தீர்ப்பில், 1949 ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய இடத்தில் வைக்கப்பட்டிருந்த ராமர் சிலை அடிப்படையில், தாக்கல் செய்யப்பட்ட வழக்கின் தகுதி குறித்து கவனம் செலுத்தியது. முகலாய பேரரசர் பாபரால் கட்டப்பட்ட மூன்று குவிமாடம் கொண்ட மசூதி தொடர்பான விவகாரம் இது. படையெடுத்த முகலாய படைகள் மசூதியை நிர்மாணிப்பதற்காக ஏற்கனவே இருந்த ராமர் கோயிலை இடித்துவிட்டன என்று இந்து தரப்பில் வாதிட்டனர்.
வாஷிங்டன் போஸ்ட்
1949 ம் ஆண்டு, அடையாளம் தெரியாத நபர்கள், மசூதிக்குள் ராமர் சிலை ஒன்றை வைத்தனர். பிறகு இந்த மசூதி 1992 இல் ஒரு பெரிய கும்பலால் இடிக்கப்பட்டது என்று அந்த செய்தி மேலும் விவரிக்கிறது. வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்ட செய்தியில், உச்சநீதிமன்றத்தின் ஏகமனதான தீர்ப்பு அந்த இடத்தில் ஒரு பெரிய இந்து கோவில் கட்டுவதற்கு களம் அமைக்கிறது என்று தெரிவிக்கிறது. பிரதமர் நரேந்திர மோடிக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியைக் குறிக்கிறது என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்து தரப்பு
மூன்று ஏக்கருக்கும் குறைவான அளவிலான நிலம்தான் விவாதத்தின் மையம். இந்து தரப்பு வாதத்தை நீதிபதிகள் உறுதிசெய்து, அந்த நிலத்தை அரசு தனது அறக்கட்டளையில் வைத்திருக்க உத்தரவிட்டது. அதே நேரத்தில், முஸ்லீம் தரப்புக்கு மாற்று இடத்தில் ஐந்து ஏக்கர் நிலத்தை அது வழங்கியது என்று அந்த நாளிதழ் தெரிவித்துள்ளது.