மகரஜோதி பொன்னம்பல மேட்டில் தெரிந்தது - சரணகோஷமிட்டு ஐயப்ப பக்தர்கள் தரிசனம்
பொன்னம்பல மேட்டில் தெரிந்த மகரஜோதியை லட்சக்கணக்கான பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்ற சரணகோஷமிட்டு தரிசனம் செய்தனர்.
சபரிமலை: மகர ஜோதி, மகரவிளக்கு பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் மண்டல பூஜையை முன்னிட்டு கடந்த நவம்பர் மாதம் 15ஆம்தேதி மாலை நடை திறக்கப்பட்டது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலைக்கு வந்து சாமிதரிசனம் செய்தனர். டிசம்பர் 26ஆம்தேதி மண்டல பூஜை நடந்தது. அன்று இரவு 11 மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டது.
மகரவிளக்கு பூஜைக்காக கடந்த மாதம் 30ஆம்தேதி மாலை கோவில் நடை திறக்கப்பட்டது. தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் தினமும் பல்லாயிரக்கணக்கில் இருமுடி சுமந்து வந்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகம், புஷ்பாபிஷேகம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளை நடத்தி வருகிறார்கள்.
குவிந்த பக்தர்கள்
விழாவின் முக்கிய நிகழ்வான மகரவிளக்கு பூஜை மற்றும் மகரஜோதி தரிசனம் இன்று மாலை நடக்கிறது. மகர ஜோதியை தரிசனம் செய்வதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்து உள்ளனர். அவர்கள் ஆங்காங்கே இடம் பிடித்து, கூடாரம் அமைத்தும் முகாமிட்டு உள்ளனர். மகரஜோதி தரிசனத்தை முன்னிட்டு சபரிமலையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.
தனியார் வாகனங்களுக்கு தடை
மகர ஜோதியை முன்னிட்டு சபரிமலையில் தனியார் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் இருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இளவங்கல்லில் தனியார் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. இலவங்கல்லில் இருந்து பக்தர்களை அழைத்து செல்ல 1500 அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
திருவாபரணம் ஊர்வலம்
மகர விளக்குப் பூஜையின்போது ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் திருவாபரணம், பந்தளம் வலிய கோயிக்கல் சாஸ்தா கோவிலில் இருந்து நேற்று பிற்பகல் ஊர்வலமாக புறப்பட்டது. இன்று மாலை சன்னிதானத்திற்கு கொண்டு வரப்பட்ட ஆபரணங்கள், ஐயப்பனுக்கு அணிவிக்கப்பட்டு தீபாராதனைகள் நடைபெற்றது.
மகரஜோதி தரிசனம்
சந்நிதானத்தில் தீபாராதனை நடைபெற்ற போது பொன்னம்பல மேட்டில் மகரஜோதி ஒளிர்ந்தது. மூன்று முறை ஒளிர்ந்த மகரஜோதியை பக்தர்கள் சாமியே சரணம் ஐயப்பா என்று முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.
5000 பேர் பாதுகாப்பு
புல்மேட்டில், 2009ஆம் நடந்த கோர விபத்தை கருத்தில் கொண்டு, பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. தற்காலிக விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. 5,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.கட்டடங்கள், மரங்கள் மற்றும் மலை சரிவுகளில் பக்தர்கள் நின்று, ஜோதி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த இடங்களில், மூங்கில் கம்புகளால் தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.