பள்ளிக்கட்டு... களைகட்டியது சபரிமலை கோவில்.. கார்த்திகை மகர விளக்கு பூஜைக்காக நடை திறப்பு
சபரிமலை: சபரிமலை கோவிலில் கார்த்திகை மகர விளக்கு பூஜையை ஒட்டி நடை திறக்கப்பட்டதையடுத்து சரணம் கோஷம் முழங்க பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் ஆண்டுதோறும் மண்டல, மகர விளக்கு பூஜைக்காக கார்த்திகை மாதம் ஒன்றாம் தேதி நடை திறக்கப்பட்டு, கார்த்திகை 1 ஆம் தேதி முதல் 60 தினங்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.
இதையொட்டி ஐய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் நாளில் மாலை அணிந்து விரதம் தொடங்கி, இருமுடி கட்டி ஐய்யப்பன் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்துவார்கள்.
சன்னிதானம் செல்ல அனுமதி:
அதன்படி சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் அடுத்த மாதம் 27 ஆம் தேதி மண்டல பூஜையும், ஜனவரி 15 ஆம் தேதி மகர விளக்கு பூஜையும் நடைபெறுகிறது.
இருமுடி வழிபாடு:
மண்டல பூஜையை முன்னிட்டு சபரிமலை ஐய்யப்பன் கோவிலில் நேற்று நடை திறப்பதையொட்டி, ஏராளமான பக்தர்கள் இருமுடி கட்டி வந்தனர். அவர்கள் பம்பை கணபதி கோவில் அருகே குழுமி இருந்தனர். அவர்கள் பிற்பகல் 2 மணிக்கு பின்னரே பம்பையில் இருந்து சன்னிதானம் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.
18ஆம் படி தரிசனம்:
இந்த ஆண்டின் மண்டல பூஜைக்காக சபரிமலை ஐய்யப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. கோவில் தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில், மேல் சாந்தி கிருஷ்ணதாஸ் நம்பூதிரி கோவில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காட்டினார். அதைத்தொடர்ந்து 18 ஆம் படிக்கு கீழ் உள்ள நெருப்பு ஆழியில் கற்பூரம் வைத்து தீ மூட்டப்பட்டது.
புதிய மேல் சாந்தி:
பின்னர் புதிய மேல் சாந்திகள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி சன்னிதானத்தில் நடந்தது. முன்னதாக சபரிமலை ஐய்யப்பன்கோவில் மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கரன் நம்பூதிரி, மாளிகப்புரம் கோவில் மேல் சாந்தியாக தேர்ந்தெடுக்கப்பட்ட உண்ணி கிருஷ்ணன் ஆகியோர் இருமுடி கட்டி பதினெட்டு படிகளுக்கு கீழ் மேளதாளம் முழங்க அழைத்து வரப்பட்டார்கள்.
மேல் சாந்தியிடம் ஒப்படைப்பு:
நேற்று மற்ற சிறப்பு பூஜைகள் எதுவும் நடைபெறவில்லை. தொடர்ந்து பக்தர்களின் தரிசனத்திற்கு பின் இரவு 10 மணிக்கு நடை அடைக்கப்பட்டு, கோவில் சாவி புதிய மேல் சாந்தியிடம் ஒப்படைக்கப்பட்டது. இன்று முதல் புதிய மேல் சாந்தி சங்கரன் நம்பூதிரி நடையை திறந்து வைத்து பூஜைகள் செய்ய உள்ளார். இன்று முதல் அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், அதைத்தொடர்ந்து 11.30 மணி வரை நெய் அபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜைக்கு பின் பகல் 1 மணிக்கு நடை அடைக்கப்படும்.
மாறுதல் செய்ய ஏற்பாடு:
மீண்டும் மாலையில் 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெறும். இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகம், 10 மணிக்கு நடைபெறும் அத்தாள பூஜைக்கு பின் இரவு 10.30 மணிக்கு அரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு நடை சாத்தப்படும். பக்தர்களின் வருகை அதிகமானால், அவர்களின் தரிசனத்திற்கு வசதியாக, கோவில் நடை திறக்கப்படும் நேரங்களில் மாறுதல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்பம் இருப்பு வைப்பு:
சபரிமலைக்கு வரும் ஐய்யப்ப பக்தர்களின் வருகையை கருத்தில் கொண்டு, தற்போது 50 லட்சம் டின் அரவணை மற்றும் தேவைக்கு ஏற்றவாறு அப்பம் இருப்பு வைக்கப்பட்டு உள்ளது. ஆன் லைன் மூலம் 6 லட்சம் பேர் முன்பதிவு செய்து, தரிசனத்திற்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ளனர். நடப்பு சீசனை முன்னிட்டு ஐய்யப்ப பக்தர்களின் வசதிக்காக, கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் முதல் கட்டமாக 300 புதிய பஸ்கள் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயக்கப்படுகிறது.
60 கண்காணிப்பு கேமராக்கள்:
காளக்கெட்டியில் தீயணைப்பு படையினர் தயார் நிலையில் உள்ளனர். சன்னிதானம், பம்பை ஆகிய இடங்களில் 60 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கும் பணி நிறைவடைந்து உள்ளது. 10 வயது முதல் 50 வயது வரையிலான பெண்கள் சபரிமலைக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு செல்வதை தடுக்கவும், கண்காணிக்கவும் பம்பையில் பெண் போலீஸ் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. பம்பையில் ஐய்யப்ப பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மூலம் தீவிர பரிசோதனை செய்யப்பட்ட பின்னரே சபரிமலை செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்.
தமிழக பக்தர்கள்:
இந்நிலையில் கார்த்திகை மகர விளக்கு பூஜைக்காக தமிழக ஐய்யப்ப பக்தர்களும் மாலை அணிந்து விரதம் துவங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.