உ.பி, பஞ்சாப் மாநில காங். மேலிட பொறுப்பாளர்கள் அதிரடியாக நீக்கம்- குலாம்நபி ஆசாத், கமல்நாத் நியமனம்!
டெல்லி: சட்டசபை தேர்தலை எதிர்கொண்டுள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் பஞ்சாப் மாநில காங்கிரஸ் கட்சியின் புதிய மேலிட பொறுப்பாளர்களாக குலாம் நபி ஆசாத் மற்றும் கமல்நாத் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
உத்தரப்பிரதேசம், பஞ்சாப் மாநில சட்டசபை தேர்தல்களை எதிர்கொள்ள அனைத்து கட்சிகளும் மும்முரமாக களமிறங்கியுள்ளன. உத்தரப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி மகள் பிரியங்கா காந்தி முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநில காங். மேலிடப் பொறுப் பாளராக இருந்துவந்த மதுசூதன் மிஸ்திரி, பஞ்சாப், ஹரி யாணா மாநில பொறுப்பாளராக இருந்த ஷகீல் அகமது ஆகியோர் அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். இவர்களில் மதுசூதன் மிஸ்திரி மத்திய தேர்தல் குழு பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இருவருக்கும் பதிலாக ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத், உத்தரப்பிரதேச மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். பஞ்சாப் மற்றும் ஹரியாணா மாநில பொறுப்பாளராக மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் நியமிக்கப்பட்டுள்ளார் என காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் ஜனார்தன் துவிவேதி தெரிவித்துள்ளார்.