உ.பி. எம்.எல்.ஏ.க்களுக்கு துடைப்பத்தை பரிசாக அளித்த அமைச்சர் ஆலம் கான்
லக்னோ: உத்தர பிரதேச அமைச்சர் ஆலம் கான் எம்.எல்.ஏ.க்களுக்கு பேனாவும், துடைப்பமும் பரிசாக அளித்து பிரதமர் மோடியை நக்கல் செய்துள்ளார்.
சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்த உத்தர பிரதேச மாநில அமைச்சர் ஆலம் கான் கடந்த 26ம் தேதி சட்டசபை கூட்டம் முடிந்ததும் எம்.எல்.ஏ.க்களுக்கு பரிசு அளித்துள்ளார். ஒரு பையில் பேனா, துடைப்பம் மற்றும் ஒரு கடிதம் ஆகியவற்றை வைத்து அளித்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
நான் உங்களுக்கு பேனா, துடைப்பம் என இரண்டு பரிசுப் பொருட்களை அளித்துள்ளேன். சமூகத்தில் உள்ள பாவங்களை இதில் எது அளிக்கும், எது ஸ்லோகங்களை மட்டும் வைத்து சமூகத்தை ஒன்றும் செய்ய முடியாது என்பதை நினைவூட்டும் என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள் என்று அதில் தெரிவித்துள்ளார்.
சுத்தமான இந்தியா பிரச்சாரத்தை துவக்கி பிரதமர் மோடி துடைப்பமும் கையுமாக போஸ் கொடுத்ததை தான் ஆலம் கான் குத்திக் காட்டியுள்ளார்.
முன்னதாக அவர் சட்டசபையில் பேசுகையில்,
பிரதமர் மோடி மக்களின் கையில் துடைப்பத்தை கொடுத்துவிட்டு பேனாவை பறித்துக் கொண்டார் என்று தெரிவித்தார்.