மும்பை குண்டுவெடிப்பை நியாயப்படுத்திய ஆசாம்கான்... தாவூத்தைவிட மோசமானவர்... சாடும் சிவசேனா
லக்னோ/மும்பை: 1993ஆம் ஆண்டு மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை நியாயப்படுத்தி உத்தரப்பிரதேச மூத்த அமைச்சர் ஆசாம்கான் கருத்து தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படி பயங்கரவாத செயல்களை ஆதரிக்கும் ஆசாம்கான், நிழல் உலக பயங்கரவாதி தாவூத் இப்ராகிமை விட மோசமானவர் என சாடியுள்ள சிவசேனா.
சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரான உத்தரப்பிரதேச அமைச்சர் ஆசாம் கான் சர்ச்சைக்குரிய கருத்துகளை கூறிவருபவர். அண்மையில் பாரீஸ் பயங்கரவாத தாக்குதல் குறித்து கருத்து தெரிவித்த அவர் ஐரோப்பிய நாடுகள் சிரியாவில் மேற்கொண்ட நடவடிக்கைக்கான பதிலடி இது என கூறியிருந்தது சர்ச்சையை கிளப்பியது.
தற்போது, பாபர் மசூதி மட்டும் இடிக்கப்படாமல் இருந்தால் மும்பையில் தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்றிருக்காது என கூறியிருக்கிறார். ஆசாம் கானின் இந்த கருத்து மும்பை தொடர் குண்டுவெடிப்பை ஆதரிப்பதாக இருப்பதாக கண்டனங்கள் எழுந்தன.
இது குறித்து சிவசேனாவின் சாம்னா ஏட்டில் எழுதப்பட்டுள்ளதாவது:
பாபர் மசூதியை இடித்ததால் மும்பை தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்ததாக ஆசாம் கான் கூறியுள்ளார். அப்படியானால் அவர் மும்பை குண்டுவெடிப்பு சம்பவத்தை ஆதரிப்பதாக அர்த்தம்.
பாரீஸ் தாக்குதலின் போது கூட இப்படித்தான் அவர் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார். இத்தகைய விஷஜந்துகள் நமது நாட்டிலேயே இருக்கும் போது எதிரிகளை நாம் வெளிநாட்டில் தேட வேண்டியது இல்லை.
பாகிஸ்தானுடன் மோதுவதற்கு முன்னால் இதுபோன்ற ஆட்களை 'ஒழுங்குபடுத்த' வேண்டும். பாகிஸ்தானில் இருந்து தாவூத் இப்ராகிமை நாடு கடத்திக் கொண்டு வரவேண்டும்தான்... ஆனால் ஆசாம்கான் போன்றவர்கள் தாவூத் இப்ராகிமைவிட மிக ஆபத்தானவர்களாக இருக்கிறார்கள்.
மஜ்லிஸ் கட்சியின் ஓவைசி, எந்தத் தரப்பையும் புண்படுத்தாமல் கருத்து தெரிவித்து வருகிறார். அவரிடம் இருந்து ஆசாம்கான் பாடம் கற்க வேண்டும்.
இவ்வாறு சாம்னா ஏட்டில் எழுதப்பட்டுள்ளது.