இந்தியர்களிலேயே மாபெரும் வள்ளல் ஆசிம் பிரேம்ஜிதான்... ரூ. 8000 கோடி நன்கொடை கொடுத்தார்!
மும்பை: இந்தியர்களிலேயே அதிக அளவில் கொடை அளித்திருப்பவர்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளார் விப்ரோ நிறுவன தலைவர் ஆசிம் பிரேம்ஜிதான். அவர் கடந்த ஆண்டு ரூ. 8000 கோடி தானமாக அளித்துள்ளாராம்.
சீனாவைச் சேர்ந்த ஹுருன் ரிப்போர்ட் நிறுவனம் வெளியிட்டுள்ள ஹுருன் இந்தியா வள்ளல்கள் பட்டியலில் இந்த விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல் முறையாக இப்படி ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது இந்த நிறுவனம். இதில் முதலிடம் பிரேம்ஜிக்குக் கிடைத்துள்ளது.
கடந்த ஆண்டில் ரூ. 8000 கோடி
கடந்த ஆண்டு மட்டும் பிரேம்ஜி ரூ. 8000 கோடி தானமாக அளித்துள்ளாராம்.
கல்விக்குத்தான் அதிகம்
இந்திய நன்கொடையாளர்களில் பெரும்பாலானவர்கள் கல்விக்குத்தான் அதிக அளவில் நன்கொடை அளிக்கிறார்களாம். கல்விக்கு மட்டும் இந்திய நன்கொடையாளர்கள் கடந்த ஆண்டு ரூ. 12,200 கோடியை அளித்துள்ளனர்.
சமூக வளர்ச்சிக்கு 2வது இடம்
சமூக வளர்ச்சிக்கு ரூ. 1210 கோடியும், சுகாதாரத்திற்கு ரூ. 1065 கோடியும், ஊரக வளர்ச்சிக்கு ரூ. 565 கோடியும், சுற்றுச்சூழல் மேம்பாட்டுக்கு ரூ. 170 கோடியும், விவசாத்திற்கு ரூ. 40 கோடியும் தானமாக அளிக்கப்பட்டுள்ளன.
ஷிவ் நாடாருக்கு 2வது இடம்
எச்சிஎல் குழுமத் தலைவர் ஷிவ் நாடார், இந்திய நன்கொடையாளர்களில் 2வது இடத்தைப் பிடித்துள்ளார். அவரது நன்கொடைப் பங்கு ரூ. 3000 கோடியாகும்.
20 வருடமாக நன்கொடை தரும் ஷிவ் நாடார்
ஷிவ் நாடாரின் பவுண்டேஷன் கடந்த 20 வருடங்களாக நன்கொடை அளித்து வருவது குறிப்பிடத்தக்கது. கல்விக்குத்தான் ஷிவ்நாடார் பவுண்டேஷன் பெருமளவில் உதவி செய்து வருகிறதாம். இதுவரை 15,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு ஷிவ் நாடார் பவண்டேஷன் உதவி புரிந்துள்ளதாம்.
31 இந்தியர்கள்
இந்த நன்கொடையாளர்கள் பட்டியலில் 31 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.