அம்பேத்கரையும், மோடியையும் பிராமணர் என்றே அழைக்கலாம்... பாஜகவின் அடுத்த சர்ச்சை ரெடி
அம்பேத்கரையும் மோடியையும் பிராமணர் என்றே அழைக்கலாம் என்று குஜராத் சட்டசபை சபாநாயகர் கூறி சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
காந்திநகர்: நன்கு படித்தோரை பிராமணர் என்று கூறலாம் என்றும் அந்த வகையில் அம்பேத்கரையும் மோடியையும் பிராமணர் என்று கூறிவதில் தனக்கு எந்த தயக்கமும் இல்லை என்றும் கூறிய குஜராத் சட்டசபை சபாநாயகர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
குஜராத் தலைநகர் காந்தி நகரில் பிராமணர் சமுதாய தொழில் தொடர்பாக மாநாடு ஒன்று இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் குஜராத் மாநில சட்டசபை சபாநாயகர் ராஜேந்திர திரிவேதி கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில் அம்பேத்கரை பிராமணர் என்று கூறுவதில் எனக்கு எந்த தயக்கமும் இல்லை. நன்கு படித்த நபர்களை பிராமணர் என்று சொல்வதில் தவறு ஏதும் இல்லை. இதன் அடிப்படையில் பிரதமர் நரேந்திர மோடியையும் பிராமணர் என அழைக்கலாம்.
என்னை பொறுத்தவரையில் ராமர் ஷத்திரியர், கிருஷ்ணரோ இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர் என்று கூறி புது சர்ச்சையை கிளப்பியுள்ளார். எஸ்சி, எஸ்டி வகுப்பினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்து போகும் அளவுக்கு சட்டதிருத்தத்தை உச்சநீதிமன்றம் கொண்டு வந்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மத்திய அரசு தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வரும் மே மாதம் 3-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட் தொடங்குகிறது குறிப்பிடத்தக்கது. பாஜக தலைவர்கள் சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதை தவிர்க்குமாறு பிரதமர் சில நாட்களுக்கு முன்பு அறிவுறுத்திய போதிலும் பிராமணர் என்ற பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.