ஆதாரமில்லாமல் அடுத்தடுத்து தள்ளுபடியாகும் வழக்குகள்.. மீண்டும் விஸ்வரூபம் எடுக்கிறார் எடியூரப்பா
பெங்களூர்: கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான புகார்கள் ஆதாரமில்லாமல் அடுத்தடுத்து தள்ளுபடியாகி வரும் நிலையில், முடக்கப்பட்ட பாஸ்போர்டும் திரும்ப கிடைத்துள்ளது.
கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவி வகித்தபோது, சட்ட விரோத குவாரித்தொழிலுக்கு உதவியதாகவும், அரசு நிலங்களை விடுவித்ததில் விதிமுறைகளை மீறியதாகவும், உட்கட்சியினர் முதல் எதிர்க்கட்சியினர் வரை பல தரப்பாலும் குற்றச்சாட்டு உள்ளானார்.
தொடர் குற்றச்சாட்டுகள் காரணமாக, பதவியேற்ற 3 ஆண்டுகளிலேயே எடியூரப்பாவிடமிருந்து, முதல்வர் பதவியை பறித்தது பாஜக மேலிடம்.
லோக்சபா எம்.பி
இதையடுத்து கர்நாடக ஜனதா கட்சி என தனிக்கட்சி தொடங்கிய எடியூரப்பா பிறகு கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் ஐக்கியமானார். தற்போது லோக்சபா உறுப்பினராக உள்ளார். மத்திய அரசியலில் கவனம் செலுத்த பாஜக மேலிடம் அவருக்கு அறிவுறுத்தியுள்ளது. மாநில அரசியலை, மாஜி முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டர் கவனித்து வருகிறார்.
ஆளுநர் அனுமதியில் குளறுபடி
இந்நிலையில், எடியூரப்பா மீது ஆதாரமின்றி, வழக்கு தொடர அப்போதைய ஆளுநர் பரத்வாஜ் (காங்கிரஸ்) அனுமதி கொடுத்துவிட்டதாக கூறியுள்ள கர்நாடக ஹைகோர்ட், அந்த அனுமதியை ரத்து செய்துள்ளது. புதிய அனுமதியை இப்போதுள்ள ஆளுநர் பரிசீலித்து தர வேண்டும் என்று கூறியுள்ளது.
பாஸ்போர்ட் ரிட்டர்ன்
மேலும், லோக்ஆயுக்தா கோர்ட்டில் நடந்த வழக்குகளும், குற்றச்சாட்டுகளை நிரூபிக்க மாநில அரசால் முடியவில்லை என்பதால் அடுத்தடுத்து தள்ளுபடி செய்யப்பட்டன. இதனால், 2012ம் ஆண்டு முதல் முடகப்பட்டிருந்த எடியூரப்பாவின் பாஸ்போர்ட்டை திரும்ப வழங்க ஹைகோர்ட் உத்தரவிட்டுள்ளது. இதனால் எடியூரப்பா இனிமேல் வெளிநாடுகளுக்கு செல்ல முடியும்.
இனிமேல் நான் நிரபராதி
இதுகுறித்து எடியூரப்பா கூறுகையில், இனிமேல், குற்றச்சாட்டுக்கு உள்ளான எடியூரப்பா.. என்ற வார்த்தையை ஊடகங்கள் பயன்படுத்த வேண்டாம். அதற்கான தேவையில்லை. நான் ஏற்கனவே கூறியதை போல என்னை முதல்வர் பதவியில் இருந்து அகற்றுவதற்காக மொத்தமாக மேற்கொள்ளப்பட்ட ஒரு பெரிய சதிதான் இந்த வழக்குகள் என்றார்.
சித்துவுக்கு செக்
கர்நாடக பாஜகவில் மக்கள் ஆதரவு கொண்ட பெரிய தலைவர் எடியூரப்பா. காங்கிரசின் சித்தராமையாவுக்கு எதிரான அரசியல் நடத்த பிற பாஜக தலைவர்களால் முடியாத நிலையில், எடியூரப்பாவை பாஜக நம்பிக்கொண்டுள்ளது. எனவே, வழக்குகளில் இருந்து முழுமையாக மீண்டு, மாநில அரசியலில் எடியூரப்பா தலை தூக்குவார் என்று அவருக்கு நெருக்கமான வட்டாரங்கள் கூறுகின்றன.