சிக்கலில் சிக்கிய பாபா ராம்தேவ் நூடுல்ஸ்.. போலி லைசென்ஸ் எண்ணால் சர்ச்சை
டேராடூன்: யோகாகுரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவனம் புதிய கோதுமை நூடுல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆனால் இதற்கு உணவு பாதுகாப்பு ஆணையத்திடம் லைசென்ஸ் பெறவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
யோகாகுரு பாபா ராம்தேவின் பதஞ்சலி ஆயுர்வேதா நிறுவன,ம் புதிய கோதுமை நூடுல்ஸை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த நூடுல்ஸ் தலைசிறந்த ஆராய்ச்சி குழுவினரால் ரைஸ் பிரான் ஆயில், டீஹைட்ரேட் செய்யப்பட்ட காய்கறிகள் ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
70 கிராம் கொண்ட ஒரு பாக்கெட்டின் விலை ரூ.15 ஆக நிர்ணயித்துள்ளது. இந்த நூடுல்ஸ் நாடு முழுவதும் விற்பனைக்கு அனுப்பப்படுவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், தற்போது ராம் தேவின் நூடுல்சுக்கு சிக்கல் எழுந்து உள்ளது. சமீபத்தில் ராம் தேவ் அறிமுகபடுத்திய நூடுல்ஸ் பாக்கெட்டில் எப்எஸ்எஸ்ஏஐ லைசென்ஸ் நம்பர் என குறிப்பிடபட்டு உள்ளது. இது உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையம் வழங்க கூடிய லைசென்ஸ் ஆகும். ஆனால் உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணையம் தாங்கள் அதற்கு அனுமதி வழங்கவில்லை என கூறி உள்ளது.
இது குறித்து உணவு பாதுகாப்பு மற்றும் இந்திய தர ஆணைய தலைவர் ஆஷிஸ் பகுகுணா சமீபத்தில் அறிமுகம் செய்த நூடுல்சுக்காக இந்திய தர ஆணையத்தின் அனுமதியை ராம் தேவ் நிறுவனம் வாங்கவில்லை என கூறினார்.
இதுவரை அந்த நூடுல்ஸ் தரபடுத்தப்படாத தயாரிப்புதான். அவர்களுக்கு நாங்கள் தான் ஒப்புதல் வழங்க வேண்டும். ஆனால் அந்த அனுமதி வழங்கவில்லை. ஆனால் அதில் உரிமம் எண் எவ்வாறு போடப்பட்டது என்பது தெரியவில்லை. இந்த விவகாரம் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பபடும். என பகுகுணா கூறினார்.
இதுகுறித்து இன்று மதியம் கருத்து தெரிவித்த ராம்தேவ் "பதஞ்சலி நிறுவனம் நூடுல்ஸ் தயாரிக்கும் அனைத்து, உற்பத்தி பிரிவுகளும் உரிய வகையில் லைசென்ஸ் பெற்றுள்ளன" என்றார்.