ஆண்குழந்தைக்கு மருந்து விற்பனை செய்த ராம்தேவ் அந்தர்பல்டி! மோடி மீது அவதூறு பரப்புவதாக திசைதிருப்பல்
டெல்லி: ஆண் குழந்தை பிறப்பதற்கு மருந்துகளை விற்பனை செய்த யோகா குரு ராம்தேவ் தற்போது அந்தர்பல்டி அடித்து பிரதமர் மோடி மீது அவதூறு பரப்புவதாக திசைதிருப்பியுள்ளார்.
பாபா ராம்தேவ் திவ்யா பார்மசி என்ற மருந்து நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனத்தின் சார்பில் புத்ரஜீவக் பீஜ் என்ற ஆயுர்வேத மருந்து தயாரித்து வெளியிடப்பட்டுள்ளது.
இந்த புத்ரஜீவக் பீஜ் தயாரிப்பு, ஆண் குழந்தையை பெண்கள் பெற்றெடுக்க உதவக் கூடிய மருந்து என்றே ராம்தே பார்மசிகள் விற்பனை செய்து வருகின்றன.
இந்த விவகாரத்தை நாடாளுமன்ற ராஜ்யசபாவில் ஐக்கிய ஜனதாதள எம்.பி கே.சி.தியாகி நேற்று எழுப்பினார். அப்போது அவர், புத்ரஜீவக் பீஜ் தயாரிப்பு, பாலின விகிதத்தை மாற்றி அமைப்பதாக குற்றம் சாட்டினார். திவ்யா பார்மசியில் இருந்து வாங்கியது என்று கூறி, அந்த மருந்து அடங்கிய டப்பாவையும், அதை வாங்கியதற்காக வழங்கப்பட்ட ரசீதையும் அவர் சபையில் காண்பித்தார்.
இதனைத் தொடர்ந்து ராம்தேவுக்கு எதிராக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து குரல் கொடுத்து அவர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினர். இந்நிலையில் தம் மீதான குற்றச்சாட்டுகளுக்கு டெல்லியில் இன்று விளக்கம் அளித்து ராம்தேவ் கூறியதாவது:
புத்ரஜீவக் பீஜ் என்பது எனக்கு ரிசிகள் கொடுத்த பெயர். புத்ரஜீவ என்றால் ஆண்குழந்தைதான் என்று அர்த்தம் அல்ல. பொதுவாக குழந்தையைத்தான் குறிக்கும்..
நாங்கள் தயாரிக்கும் ஆயுர்வேத மருந்து ஒன்றின் கெளதன்டி.. அதன் பொருள் மாட்டுப் பல்..அதற்காக மாட்டுப் பல்லில் இருந்து தயாரிப்பது என்பது அல்ல. அது போன்ற வடிவத்தில் இருக்கும் ஒருவகை கல்லில் இருந்து தயாரிக்கிறோம்..
தரு என்ற ஒரு பெயரில் மருந்து இருக்கிறது. அதற்காக அது மதுபானம் என்பது பொருளல்ல... அஸ்வகந்தா என்ற மருந்துக்கு பெயர் குதிரையில் இருந்து தயாரித்தது என்பது அல்ல..
மருந்து ஆண் குழந்தையை பெற்றெடுக்க உதவும் மருந்து கிடையாது, குழந்தை பிறப்பை உறுதிசெய்வது ஆகும். புதிதாக விற்பனை செய்யப்படும் புத்திர ஜீவக் பாக்கெட்டுகளில் ஆண் குழந்தை பிறப்புக்கானது என்ற வாசகம் இடம்பெறாது..
நாடாளுமன்றம் என்பது சமூக மற்றும் பொருளாதார பிரச்சனையை எழுப்புவதற்கானது. என்னை குறிவைத்து பிரதமர் மோடிக்கு அவப்பெயர் ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். ஐக்கிய ஜனதாதள உறுப்பினர் கே.சி.தியாகி மன்னிப்பு கேட்கவேண்டும்.
இவ்வாறு ராம்தேவ் கூறினார்..