லாபத்தில் உள்ளூர் மக்களுக்கும் ஷேர் தர வேண்டும்.. ராம்தேவ் நிறுவனத்துக்கு உத்தரகாண்ட் கோர்ட் உத்தரவு
டேராடூன்: பதஞ்சலி நிறுவனத்தின் நிறுவனரான யோகா குரு பாபா ராம் தேவ் தாங்கள் ஈட்டும் லாபத்தை உள்ளூர் மக்களுடன் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்று உத்தரகாண்ட் உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக பார்க்கப்படுவது பாபா ராம் தேவின் பதஞ்சலி நிறுவனமாகும். பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்து வரும் இந்நிறுவனத்துக்கு சொந்தமாக திவ்யா பார்மசி என்ற நிறுவனம் இயங்கி வருகிறது.
அந்த நிறுவனம் உத்தரகாண்ட் மாநிலத்தில் இருக்கும் ஆயுர்வேத மூலப் பொருட்களை கொண்டு பொருட்களை தயாரித்து வருகிறது.
இந்நிலையில், உத்தரகாண்ட் பல்லுயிர் அமைப்பானது, பல்லுயிர் பெருக்க சட்டம், 2002-ன் கீழ், திவ்யா ஃபார்மசி நிறுவனம் தனது லாபமான 421 கோடி ரூபாயிலிருந்து 2 கோடி ரூபாயை உள்ளூர் மக்களுடனும், விவசாயிகளுடனும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியது.
ஆனால் அந்த நோட்டீஸுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த திவ்யா ஃபார்மசி நிறுவனம், உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தது. அந்த வழக்கில்தான், தற்போது உத்தரகாண்ட் நீதிமன்றம் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது. அந்த தீர்ப்பானது உத்தரகாண்ட் பல்லுயிர் அமைப்புக்கு சாதகமாக வந்துள்ளது.
அந்த தீர்ப்பில் உயர்நீதிமன்றம் கூறியிருப்பதாவது:
உத்தரகாண்ட் பல்லுயிர் அமைப்புக்கு திவ்யா ஃபார்மசியின் லாபத்தில் பங்கிட்டுக் கொள்ள வேண்டும் என்று சொல்ல முழு உரிமையும் உள்ளது. இயற்கை வளங்கள் என்பது தேசிய சொத்து மட்டுமல்ல. அது, எங்கிருந்து எடுக்கப்படுகிறதோ அங்கு வாழும் மக்களுக்கும் சொந்தமானதுதான் என்று நீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளது.