எங்களுக்கு பத்ம விருது வேண்டாம் - ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர், பாபா ராம்தேவ் மறுப்பு
டெல்லி: யோகா குரு பாபா ராம்தேவ் மற்றும் ஆன்மிக குரு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் ஆகியோர் தங்களுக்கு பத்ம விருது வேண்டாம் எனத் தெரிவித்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் பத்ம விருது பெறுபவர்களின் பெயர் பட்டியல் என ஊடகங்களில் ஒரு தகவல் பரவியது. அந்த பட்டியலில் இந்தி நடிகர் அமிதாப், ரஜினி மற்றும் 10 சாதுக்களின் பெயர்கள் இருந்தது பரபரப்பை உண்டாக்கியது.
ஆனால், உடனடியாக இது தொடர்பாக உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்தது. அதில், மத்திய அரசு அவ்வாறு பெயர்ப்பட்டியல் எதையும் வெளியிடவில்லை என விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.
இருப்பினும் பத்ம விருது பரிசீலனையில், யோகா குரு பாபா ராம்தேவின் பெயரும் இருந்ததற்கு, காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்நிலையில் ராம்தேவ், ‘தனக்கு பத்ம விருது வேண்டாம்' என அறிவித்துள்ளார். இது குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு அவர் கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
அதில், எனக்கு பத்மவிபூஷன் விருது தர மத்திய அரசு விரும்புவதாக அறிந்தேன். அதற்காக நன்றிக்கடன் பட்டுள்ளேன். ஆனால் நான் ஒரு சன்னியாசி. எனது சன்னியாச தர்மத்திற்கு முழுமையாக பணியைத் தொடர விரும்புகிறேன். எனவே இந்த விருதை நன்றியுடன் மறுக்க நான் கடமைப்பட்டுள்ளேன். இதை வேறொரு சிறந்த நபருக்குத் தருமாறும் மத்திய அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் ராம்தேவ்.
யோகா குருபாபா ராம்தேவை தொடர்ந்து பத்ம விருதை ஏற்க ஆன்மிக குரு ரவிசங்கரும் மறுத்து விட்டார். இது தொடர்பாக டுவிட்டரில் அவர் கூறியுள்ளதாவது: விருதுக்கு எனது பெயரை பரிசீலனை செய்ததற்காக நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த பெருமையை வெறோருவருக்கு வழங்க வேண்டும் என கூறியுள்ளார். இதுகுறித்து மேலும் அவர் கூறுகையில் ராஜ்நாத் சிங் என்னை அனைத்து விருது குறித்துக் குறிப்பிட்டார். அரசுக்கு அதற்காக நன்றி கூறிக் கொள்கிறேன். என்னை விட சிறந்தவர்கள் பலர் உள்ளனர் என்றார் அவர்.