பாபர் மசூதி இடிப்பு வழக்கு... அத்வானி, ஜோஷி, உமாபாரதி நேரில் ஆஜராக சுப்ரீம் கோர்ட் விலக்கு
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
டெல்லி: பாபர் மசூதி இடிப்பு வழக்கில் பாஜக மூத்த தலைவர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியோர் நேரில் ஆஜராக உச்ச நீதிமன்றம் விலக்கு அளித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு தொடர்பான வழக்கு, விசாரணை லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 30-ஆம் தேதி தொடங்கியது. நீதிமன்ற நடவடிக்கைகள் தொடங்கியதும், அத்வானி உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்டவர்கள் கைது நடவடிக்கையை தவிர்க்க முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தனர்.
இதையேற்று நீதிமன்றம் இவர்களுக்கு முன்ஜாமீன் வழங்கியுள்ளது. தலா ரூ.20000 பிணைத்தொகையின் பேரில் இவர்களுக்கு நிபந்தனையுடன் கூடிய முன்ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் 9 பேருடன் சதி திட்டத்தில் ஈடுபட்டதாக அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி ஆகியேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய செவ்வாய்க்கிழமை நேரில் ஆஜராகுமாறு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
எனினும் நேரில் ஆஜராவதில் இருந்து தங்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று தாக்கல் மனுவை லக்னோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே. யாதவ் நிராகரித்தார். இதைத் தொடர்ந்து அவர்கள் மூவரும் குற்றச்சாட்டை பதிவு செய்ய நேரில் ஆஜராவதிலிருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் கோரினர். இதை ஏற்று மூவரும் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விலக்கு அளித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.