பாபர் மசூதி இடிப்பு.. சிபிஐ நீதிமன்றத்தில் மீண்டும் இன்று தொடங்குகிறது விசாரணை.. அத்வானி ஆஜர்?
பாபர் மசூதி இடிப்பு வழக்கில், உச்ச நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை தொடங்க உள்ளது.
டெல்லி: உச்சநீதிமன்ற உத்தரவின்படி, அத்வானி உள்ளிட்டோர் மீதான பாபர் மசூதி இடிப்பு வழக்கு விசாரணை லக்னோவில் உள்ள சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் தொடங்குகிறது.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இருந்த பழமை வாய்ந்த பாபர் மசூதி கடந்த 1992ம் ஆண்டு டிசம்பர் 6ந் தேதி ஆர்.எஸ்.எஸ். உள்ளிட்ட இந்துத்துவ அமைப்பினரால் இடிக்கப்பட்டது. இது தொடர்பாக லக்னோ சிறப்பு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடந்து வருகிறது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டது தொடர்பாக, பாஜக தலைவர்கள் அத்வானி, உமா பாரதி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங் உள்ளிட்ட 13 பேர் மீது சதி குற்றச்சாட்டப்பட்டது. இவர்களை, ரேபரேலி சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது. அலகாபாத் உயர் நீதிமன்றமும் அதை உறுதி செய்தது.
மேல்முறையீடு
இதனை எதிர்த்து, சி.பி.ஐ. தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தொடங்கி 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. ஒரு சம்பவத்தில் இருவேறு நீதிமன்றகளில் விசாரணை நடத்தக்கூடாது என உத்தரவிட்ட உச்சநீதிமன்றம், அத்வானி உள்ளிட்டோர் மீதான குற்றச்சதி வழக்கையும் லக்னோ சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றி கடந்த மாதம் 19-ந் தேதி உத்தரவிட்டது.
சி.பி.ஐ நீதிமன்றம்
இந்த வழக்கை லக்னோ சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தினமும் விசாரித்து, 2 ஆண்டில் தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கடந்த மாதம் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எஸ்.கே.யாதவ் முன்னிலையில் கடந்த சனிக்கிழமை தொடங்கியது.
விஎச்பி தலைவர்கள் ஆஜர்
அப்போது நீதிமன்ற சம்மன் பெற்ற, 59 வயதான ராம் விலாஸ் வேதாந்தி, 71 வயதான சம்பத் ராய், 88 வயதான பைகுந்த் லால் ஷர்மா, 79 வயதான மகந்த் நிரித்யா கோபால் தாஸ், 68 வயதான தரம்தாஸ் மகாராஜ் ஆகிய 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்கள் நேரில் ஆஜராகினர். 6வது குற்றவாளியான சதிஷ் பிரதான் ஆஜராகவில்லை. நேரில் ஆஜரான 5 விஸ்வ இந்து பரிஷத் தலைவர்களுக்கும் நீதிபதி எஸ்.கே.யாதவ் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இதையடுத்து, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
அத்வானி நேரில் ஆஜர்?
இவர்களைப் போன்றே அத்வானி உள்ளிட்ட தலைவர்களும் நீதிமன்றத்தில் ஆஜராகி ஜாமீன் பெற வேண்டும். இன்று தொடங்க உள்ள விசாரணையில் அத்வானி நேரில் ஆஜராவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.