போனியாகாத தனி கட்சி..14 ஆண்டு வனவாசத்துக்குப் பின் தாய்க்கட்சி பாஜகவில் ஜார்க்கண்ட் பாபுலால் மராண்டி
ராஞ்சி: ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் பாபுலால் மராண்டி தமது ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவை பாஜகவில் இணைத்துவிட்டார்.
2000-ம் ஆண்டு பீகாரில் இருந்து பிரிக்கப்பட்டு ஜார்க்கண்ட் தனி மாநிலம் உதயமானது. இம்மாநிலத்தின் முதலாவது முதல்வராக பதவி வகித்தார் பாஜகவில் இருந்த பாபுலால் மராண்டி.
ஆனால் பாபுலால் மராண்டி நீண்டகாலம் முதல்வராக பதவியில் நீடிக்கவில்லை. 2003-ல் பாபுலால் மராண்டி ராஜினாமா செய்தார். அதன் பின்னர் 2005-ல் அர்ஜூன் முண்டா தலைமையில் ஜார்க்கண்ட்டில் பாஜக ஆட்சி அமைத்தது.
அப்போது பாஜக தலைமை ஓரங்கட்டுவதாக கருதிய பாபுலால் மராண்டி, 2006-ல் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சா என்ற தனிக்கட்சியை தொடங்கினார். ஆனாலும் ஜார்க்கண்ட் அரசியலில் பாபுலால் மராண்டியால் பெரிய தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.
2014 சட்டசபை தேர்தலில் பாபுலால் மராண்டியின் ஜார்க்கண்ட் விகாஸ் மோர்ச்சாவுக்கு 6 எம்.எல்.ஏக்கள் கிடைத்தனர். ஆனால் இவர்களி 5 பேர் பாஜகவுக்கு தாவினர். இதனால் ஜார்க்கண்ட்டில் பாஜக பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைக்க முடிந்தது.
இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ்- ஜே.எம்.எம். தலைமையிலான கூட்டணியில் இணைய விரும்பினார் பாபுலால் மராண்டி. ஆனால் இந்த முயற்சி பலிக்கவில்லை. இதனால் தனித்துப் போட்டியிட்ட பாபுலால் மராண்டி கட்சி 3 இடங்களில்தான் வென்றது.
பினராயி மீது ஊழல் புகார்... கேரள மாநில பாஜக தலைவரின் தடாலடி குற்றச்சாட்டு
இதனையடுத்து வேறுவழியே இல்லாமல் தாய் கட்சியான பாஜகவில் ஐக்கியமாகிவிட்டார் பாபுலால் மராண்டி. 14 ஆண்டுகாலத்துக்குப் பின்னர் பாஜகவில் இணைந்துள்ளார் பாபுலால் மராண்டி. ராஞ்சியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா முன்னிலையில் பாஜகவில் மீண்டும் இணைந்தார் பாபுலால் மராண்டி.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் இனி பாஜகவின் முகமாக பாபுலால் மராண்டிக்கு முக்கியத்துவம் கிடைக்கும் என அவரது ஆதரவாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.