ஓடும் ரயிலில் கழிவறையில் பிரசவம்: தண்டவாளத்தில் விழுந்தும் காயமின்றி தப்பிய குழந்தை
கொல்கத்தா: ஓடும் ரெயிலின் கழிவறையில் பிறந்த குழந்தை தண்டவாளத்தில் விழுந்தும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளது.
மேற்கு வங்காள மாநிலம், முர்ஷிதாபாத்தில் உள்ள ஜூம்கா கிராமத்தை சேர்ந்தவர் அப்ரோசா பீவி. இவர் தனது கர்ப்பிணி மகள் ரைஹானா பீவியுடன் நேற்று லால்கோடா ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்தார்.
மாலை 6.30 மணியளவில் நாடியா மாவட்டம், பலாஷி நிலையத்தை ரயில் நெருங்கிய போது கழிவறைக்கு சென்றுள்ளார் ரைஹானா. அப்போது திடீரென கழிவறையில் வைத்தே ரைஹானாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. மற்றவர்களை உதவிக்கு அழைக்கக் கூட அவகாசம் இன்றி எதிர்பாரா விதமாக கழிவறைக்குள்ளேயே அவருக்கு பிரசவம் நடந்துள்ளது.
இந்நிலையில், கழிவறைக்குச் சென்ற மகள் நெடுநேரமாகியும் திரும்பாததால், சந்தேகமடைந்த அப்ரோசா கழிவறைக்கு சென்று பார்த்தபோது அதிர்ந்து போயுள்ளார். காரணம் சற்றுமுன் பிறந்த குழந்தை கழிவறை பீங்கான் துளை வழியாக தொப்புள் கொடியுடன் தண்டவாளத்தில் தொங்கிக்கொண்டிருந்திருக்கிறது.
விபரமறிந்த மற்ற பயணிகள் உடனடியாக அபாய சங்கிலியை பிடித்திழுத்து ரயிலை நிறுத்தியுள்ளனர். உடனடியாக தண்டவாளத்தில் இருந்து மீட்கப் பட்ட குழந்தை பலாஷி ரயில் நிலையத்திற்கு அருகேயுள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது.
அங்கு தாயையும், சேயையும் பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் நலமாக உள்ளதாக தெரிவித்துள்ளனர். மேலும், தண்டவாளத்தில் விழுந்த குழந்தை பெரிய காயம் ஏதும் ஏற்படாமல் தப்பியது அதிசயம்தான் என அவர்கள் ஆச்சர்யம் தெரிவித்துள்ளனர்.