டாக்சியில் குழந்தை பெற்று 'உபேர்' என்று பெயர் வைத்த டெல்லி பெண்
டெல்லி: டெல்லியில் உபேர் டாக்சியில் பெண் ஒருவர் குழந்தையை பெற்றெடுத்துள்ளார். அவர் தனது ஆண் குழந்தைக்கு உபேர் என பெயர் வைத்துள்ளார்.
தெற்கு டெல்லியில் உள்ள தேவ்லி பகுதியைச் சேர்ந்தவர் பப்ளி. நிறைமாத கர்ப்பிணியான அவருக்கு கடந்த வியாழக்கிழமை இரவு பிரசவ வலி வந்துள்ளது. உடனே ஆம்புலன்ஸுக்கு போன் செய்துள்ளனர். பலமுறை போன் செய்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை.
இதையடுத்து உபேர் டாக்சிக்கு போன் செய்து வரவழைத்துள்ளனர். அந்த பெண் தனது 2 தோழிகளுடன் டாக்சியில் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு கிளம்பினார். ஆனால் வழியிலேயே டாக்சியில் அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து அந்த பெண் தனது குழந்தைக்கு டாக்சி நிறுவனத்தின் பெயரான உபேர் என்று பெயர் வைத்துள்ளார்.
இது குறித்து டாக்சி டிரைவர் ஷாநவாஸ் கூறுகையில்,
அந்த பெண் மருத்துவமனைக்கு செல்ல எனக்கு போன் செய்தார். ஆம்புலன்ஸை அழைக்க வேண்டியது தானே என்றேன். பலமுறை அழைத்தும் ஆம்புலன்ஸ் வரவில்லை என்றார். டாக்சியில் செல்லும்போதே அவருக்கு வலி அதிகமானதால் வாகனத்தை நிறுத்தினேன்.
டாக்சியில் அந்த பெண் ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். தாயையும், சேயையும் சப்தர்ஜங் மருத்துவமனையில் அனுமதித்தேன். அந்த பெண்ணை நான் தூக்கிச் சென்று ஸ்ட்ரெட்சரில் படுக்க வைத்தேன். நான் அவரின் கணவரா என்று மருத்துவர்கள் கேட்டனர்.
உடனே நான் நடந்த சம்பவத்தை கூறியதும் அவர்கள் என்னை பாராட்டினார்கள். அந்த குழந்தைக்கு பெயர் வைக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயர் வைக்க என்னை தான் அழைத்துள்ளனர் என்றார்.