உ.பி.: பிரசவத்தின்போது குழந்தையை வெளியே எடுக்கையில் தனியாக பிய்ந்து வந்த தலை
லக்னோ: உத்தர பிரதேசத்தில் மருத்துவரின் அலட்சியத்தால் பிரசவத்தின்போது குழந்தையை வெளியே எடுக்கையில் அதன் தலை பிய்ந்து தனியாக வந்துள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் ராம்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 32 வயது நிறைமாத கர்ப்பணிக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை பிரசவ வலி எடுத்துள்ளது. இதையடுத்து அவர் மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அன்று மாலையே அவருக்கு குழந்தை பிறந்துள்ளது.
பிரசவத்தின்போது மருத்துவரின் அலட்சியத்தால் குழந்தையை வெளியே எடுக்கையில் அதன் தலை பிய்ந்து தனியாக வந்துள்ளது. இதையடுத்து மருத்துவரும், நர்ஸுகளும் சேர்ந்து குழந்தையின் உடலை குப்பைத் தொட்டியில் போட்டுவிட்டனர்.
குழந்தை எங்கே என்று அந்த பெண்ணின் உறவினர்கள் கேட்டதற்கு மருத்துவரும், நர்ஸுகளும் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளனர். அதன் பிறகே நடந்த சம்பவம் பற்றி தெரிய வந்து அந்த பெண்ணின் உறவினர்கள் மருத்துவமனையில் போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து மருத்துவமனைக்கு வந்த போலீசார் போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து விசாரணையை துவங்கியுள்ளனர்.
ராம்பூர் மாவட்ட மாஜிஸ்திரேட் ராகேஷ் குமார் சிங் இன்று மருத்துவமனைக்கு சென்று ஆய்வு செய்தார். மருத்துவமனை ஊழியர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.