தன் வினை தன்னைச் சுடும்... ஆந்திராவில் சட்டமேலவை கலைப்பு பின்னணி
அமராவதி: பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் சென்றுகொண்டிருக்கும் ஆந்திர மாநில அரசியலில், அடுத்தக்கட்டமாக சட்டமேலவை கலைப்பு விவகாரம் முக்கிய விவாதமாக மாறியுள்ளது.
ஏற்கனவே மூன்று தலைநகரங்கள் அமைப்பது தொடர்பான முயற்சியில் ஈடுபட்டு அதை கிடப்பில் வைத்துள்ள ஜெகன்மோகன்ரெட்டி, அடுத்ததாக சட்டமேலவையை கலைத்து சந்திரபாபு நாயுடுவுக்கு ஷாக் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
இதனிடையே தெலுங்கு தேசம் கட்சிக்கு குடைச்சலை கொடுக்க வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் மத்தியில் ஆட்சி செய்தபோது ஆந்திராவுக்கு சட்டமேலவையை கொண்டுவந்தது வேறுயாருமல்ல ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர ரெட்டிதான்.
குஜராத் மத்திய பல்கலைக் கழக மாணவர் சங்க தேர்தல்: பாஜக மாணவர் அமைப்பு ஏபிவிபி படுதோல்வி
சட்டப்பேரவை
ஆந்திர மாநிலத்தில் சட்டமேலவையை கலைப்பதற்கான ஒப்புதலை அமைச்சரவை நேற்று காலை வழங்கிய நிலையில், உடனடியாக அதை நிறைவேற்றுவதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளார் அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. சட்டமேலவை இருப்பதால் தனது அரசு கொண்டு வரும் பல புதிய மசோத்தக்களை நிறைவேற்றமுடியவில்லை என நினைக்கிறார் ஜெகன். இதனால் சட்டமேலவை முறையை அடியோடு ஒழித்துவிட்டால் தான் நினைத்ததை ஆந்திராவில் செயல்படுத்த முடியும் என்பது ஜெகனின் நம்பிக்கை.
28 உறுப்பினர்கள்
ஆந்திர சட்டமேலவையில் மொத்த உறுப்பினர்களின் எண்ணிக்கை 58. அதில் ஜெகன் மோகன் கட்சியின் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 9 மட்டுமே ஆகும். ஆனால் அதேசமயம் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவர்கள் 28 பேர் சட்டமேலவை உறுப்பினர்களாக உள்ளனர். இதனால் சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் பல தீர்மானங்களையும், மசோதாக்களையும் சட்டமேலவை ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும் போது அங்கு ஒப்புதல் கிடைக்காத நிலை உள்ளது. என்னதான் ஆட்சியில் இருந்தாலும் தான் நினைத்த ஒன்றை செயல்படுத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும், கோபமும் ஜெகனுக்கு இருந்து வந்தது. இதன் வெளிப்பாடாகவே சட்டமேலவையை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார்.
3 தலைநகரங்கள்
ஆந்திராவில் 3 தலைநகரங்கள் அமைக்கும் புதிய மசோதாவை கொண்டு வந்த ஜெகன் மோகனால் சட்டமேலவையில் அதை கொண்டுவர முடியவில்லை. இதேபோல், ஆந்திரா முழுவதும் அரசுப்பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வியை கொண்டு வரும் சட்டத்தையும் ஜெகனால் கொண்டுவர முடியவில்லை. காரணம் சட்டமேலவையில் அதை ஒப்புதல் கிடைக்காத வகையில் பார்த்துக்கொண்டனர் தெலுங்கு தேசம் கட்சி உறுப்பினர்கள். இதனால் அடியோடு சட்டமேலவையை கலைக்கும் முடிவை எடுத்துள்ளார் ஜெகன்.
தன்வினை
இதனிடையே ஆந்திராவில் சட்டமேலவை கலைக்கப்படுவதற்கு தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதில் சுவராஸ்யமான விவகாரம் என்னவென்றால் ஆந்திராவில் சட்டமேலவையை கொண்டு வந்ததே ஜெகன் மோகன் ரெட்டியின் தந்தை ராஜசேகர் ரெட்டி தான் என்பது குறிப்பிடத்தக்கது. தந்தை கொண்டு வந்த ஒன்றை மகனே அடியோடு ஒழிக்க பார்ப்பது கவனிக்கத்தக்கது.