பரிசோதிக்கப்படாத ரத்தத்தை ஏற்றியதால் 2,234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு: திடுக் தகவல்
டெல்லி: முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்றப்பட்டதால் இந்தியாவில் கடந்த 17 மாதங்களில் மட்டும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்ற அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்பட்டதால் எத்தனை பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று சமூக ஆர்வலர் சேத்தன் கோத்தாரி தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் விண்ணப்பித்தார்.
அவருக்கு அளித்த பதிலில் தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பு கூறியிருப்பதாவது,
ஹெச்.ஐ.வி.
முறையாக பரிசோதனை செய்யப்படாத ரத்தம் ஏற்பட்டதால் கடந்த 17 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 2 ஆயிரத்து 234 பேருக்கு ஹெச்.ஐ.வி. பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நாட்டிலேயே உத்தர பிரதேச மாநிலத்தில் தான் அதிகபட்சமாக 361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குஜராத்
பரிசோதிக்காத ரத்தம் ஏற்றப்பட்டதால் ஹெச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டோர் அதிகம் உள்ள மாநிலங்களில் உத்தர பிரதேசத்தை அடுத்து குஜராத்(292) இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா(276) மூன்றாவது இடத்திலும், டெல்லி(264) நான்காவது இடத்திலும் உள்ளன.
ரத்ததானம்
ஒருவருக்கு ரத்தம் ஏற்றும் முன்பு அந்த ரத்தத்தில் ஹெச்.ஐ.வி., மலேரியா, ஹெச்.பி.வி. உள்ளிட்ட பாதிப்புகள் இருக்கிறதா என்பதை சோதனை செய்ய வேண்டும் என்று சட்டம் கூறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எய்ட்ஸ்
2011ம் ஆண்டில் இந்தியாவில் எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 20.9 லட்சம் என தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அமைப்பின் 2015ம் ஆண்டு ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் கூட
எய்ட்ஸ்/ஹெச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட 20.9 லட்சம் பேரில் 89 சதவீதம் பேர் 15 முதல் 49 வயது வரை உள்ளவர்கள். பாதிக்கப்பட்டவர்களில் 7 சதவீதம் பேர் அதாவது 1.45 லட்சம் பேர் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.