யெஸ் வங்கியை தொடர்ந்து அபாயத்தில் லட்சுமி விலாஸ் வங்கி? ரிசர்வ் வங்கியின் உதவியை நாடியது
கொல்கத்தா: யெஸ் வங்கியை தொடர்ந்து அடுத்த அபாயத்தில் லட்சுமி விலாஸ் வங்கி உள்ளது. கடும் நிதி நெருக்கடியில் சிக்கியுள் லட்சுமி விலாஸ் வங்கி சுமார் ரூ.2200 கோடி நிதி திரட்டினால் தான் தப்பிக்கும் . அதற்கு அனுமதி அளிக்குமாறு ரிசர்வ் வங்கியை நாடி உள்ளது.
வாராக்கடன் பிரச்னையில் யெஸ் வங்கி சிக்கியதால் அந்த வங்கியை ரிசர்வ் வங்கி தன் கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. பணம் எடுக்க கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கடன்களுக்கான இஎம்ஐ தொகைகளை செலுத்துவதற்கான சில வசதிகளை மட்டும் அளித்துள்ளது.
இந்நிலையில் ட்சுமி விலாஸ் வங்கியும் நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பொதுவாக வங்கிககள் போதுமான மூலதன நிதியை வைத்திருக்க வேண்டும். அப்போது தான் அந்த வங்கி வலிமையான வங்கியாக பார்க்கப்படும். ரிசர்வ் வங்கி விதிமுறைப்படி குறைந்த பட்ச மூலதன நிதி 9 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் லட்சுமி விலாஸ் வங்கியின் மூல தன நிதி 2018ம் ஆண்டு 7.57 சதவீதமாக குறைந்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி 3.46 சதவீதமாக சரிந்து விட்டது.
நிதி திரட்ட முயற்சி
கடந்த இரண்டு ஆண்டுகளாக லட்சுமி விலாஸ் வங்கி நிதியை திரட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது. இதன்படி 2018 மற்றும் 2019ம் ஆண்டுகளில் 1430 கோடி ரூபாய் திட்டது. அத்துடன் இந்தியா புல்ஸ் ஹவுசிங் பைனான்ஸ் கடன் நிறுவனத்துடன் இணைப்பதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் ரிசர்வ் வங்கி அதற்கு அதிரடியாக தடை விதித்தது.
23 சதவீதம்
இந்நிலையில் லட்சுமி விலாஸ் வங்கியின் வாராக்கடன் 23.27 சதவீதமாகவும், நிகர வாரக்கடன் 9.81 சதவீதமாகவும் உள்ளது. மொத்த வருவாயும் குறைந்துவிட்டது. வாராக்கடன் அதிகரப்பு, வருவாய் குறைவு ஆகிய காரணங்களால் கடந்த டிசம்பர் மாதத்தில் இந்த வங்கிக்கு 335 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
14 ரூபாய்க்கு வந்த பங்கு
ஏற்கனவே சில நிறுவனங்கள் இந்த வங்கி பங்குகளை வாங்கும் முயற்சிக்கு ரிசர்வ் வங்கி தடைவிதித்து முட்டுக்கட்டை போட்டது. தற்போது ரிசர்வ் வங்கி உதவினால் தான் நிலைமை சீராகும் என்கிறார்கள். இந்த வங்கியின் பங்கு மதிப்பு கடந்த 2017 ஜுலையில் 188 .30 ஆக இருந்தது. ஆனால் தற்போது 14 ரூபாய் என்கிற அளவுக்கு சரிந்துள்ளது.
நிலைமை மோசமாகும்
லட்சுமி விலாஸ் வங்கி தற்போதைய நிலையில் வெளிநாட்டு முதலீட்டாளர்களிடம் பங்குகளை விற்பனை செய்து 250 மில்லியன் டாலர் (1800 கோடி) முதல் 300 மில்லியன் டாலர் வரை (2200 கோடி) நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அப்படி விற்று நிதி திரட்டினால் தான் நிதி நெருக்கடியில் இருந்து லட்சுமி விலாஸ் வங்கி தப்பிக்கும். அதற்காக 49 சதவீதம் முதல் 60 சதவீதம் பங்குகளை விற்க வேண்டும்.ஆனால் 49 சதவீதற்கு மேல் பங்குகளை விற்க ரிசர்வ் வங்கி அனுமதி தேவை. எனவே தற்போது ரிசர்வ் வங்கியின் உதவியை நாடி உள்ளது. ரிசர்வ் வங்கி இதற்கு அனுமதித்தால் நிலைமை சீராகும்.இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும் என்கிறார்கள். லட்சுமி விலாஸ் வங்கி தமிழகத்தைச் சேர்ந்த வங்கி என்பதால் மக்கள் அச்சத்தில் உள்ளார்கள்.