நிதி தேவையில்லை.. பலாத்கார குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள்: உ.பி. பெண்களின் தந்தை கண்ணீர்!
லக்னோ: அரசு கொடுக்கும் 5 லட்சம் ரூபாய் நிதி தேவையில்லை; எங்களுக்கு நீதிதான் வேண்டும். குற்றவாளிகளை தூக்கிலிடுங்கள் என்று உத்தரபிரதேசத்தில் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட தலித் சகோதரிகளின் தந்தை கண்ணீர் மல்க கூறியுள்ளார்.
உ.பி மாநிலம் படான் மாவட்டத்தில் உஸ்ஹைத் பகுதியில் உள்ள கத்ரா கிராமத்தைச் சேர்ந்த தலித் சிறுமிகள் இருவர் ஒரு கும்பலால் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டு மரத்தில் சடலமாகத் தொங்கவிடப்பட்டனர்.
இதனால் கத்ரா கிராமவாசிகள் கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் பிணத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து மாவட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை சமாதானப்படுத்தி துரித விசாரணைக்கு உத்தரவிட்டனர்.
ரூ.5லட்சம் நிவாரணம்
உ.பி.முதல்வர் அகிலேஷ் யாதவ் ‘சிறுமிகளின் குடும்பங்களுக்கு நஷ்ட ஈடாக தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும். இந்த சம்பவம் குறித்து விரைவு நீதிமன்றம் விசாரணை நடத்தும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை பெற்றுத் தரப்படும். அலட்சியமாக இருந்த போலீஸ்காரர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்று தெரிவித்தார்.
நீதிவேண்டும்
இதற்கு கருத்து கூறியுள்ள சிறுமிகளின் தந்தை , எங்களுக்கு இழப்பீடு தேவை இல்லை. எங்கள் மகள்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். எங்கள் மகள்களை கொடூரமாக கொன்ற குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு கடுமையான தண்டனையை விதிக்கவேண்டும்.
தூக்கில் போடுங்கள்
குற்றவாளிகள் எங்கள் மகள்களை தூக்கில் போட்டுள்ளனர் அவர்களையும் அதே மாதிரி தூக்கில்போட வேண்டும் என்று கண்ணீரோடு தெரிவித்தார்.
நீதி கிடைக்கும் வரை போராட்டம்
கிராம மக்கள் அனைவரும் போலீஸ் மீது நம்பிக்கை இழந்துள்ளனர் நாங்கள் அனைவரும் நீதி கிடைக்கும் வரை போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம் என்றும் சிறுமிகளின் தந்தை தெரிவித்துள்ளார்.