பெண் நீதிபதியின் கைகளுக்கு மாறிய பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம்!!
திருவனந்தபுரம்: காலம்காலமாக திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசுவாமி கோவில் நிர்வாக பொறுப்பு திருவிதாங்கூர் மன்னர் குடும்பத்தின் கைகளில் இருந்து வந்தது. தற்போது உச்சநீதிமன்ற உத்தரவுப்படி பெண் நீதிபதி இந்திரா தலைமையிலான குழு நிர்வகிக்க தொடங்கியுள்ளது.
திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோவில் நகைகள் மற்றும் சொத்துகளை பராமரிப்பதில் முறைகேடுகள் நடப்பதாக ஓய்வு பெற்ற ஐ.பி.எஸ் அதிகாரி சுந்தரராஜன் வழக்கு தொடர்ந்தார். இதற்கான வழக்கு விசாரணை சுப்ரீம் கோர்ட்டில் நடைபெற்றது. அங்கு நடந்த விசாரணைக்கு பின்னர் சுப்ரீம் கோர்ட் கோபால் சுப்பிரமணியம் என்ற வக்கீலை பத்மநாபசுவாமி கோவில் விவகாரங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டது.
அதன்படி, கோபால் சுப்பிரமணியம் கோவில்களில் ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்தார். இதில், கோவில் சொத்துக்கள் மற்றும் பொக்கிஷங்கள் பராமரிப்பில் மன்னர் குடும்பம் முறைகேடு செய்திருப்பதாக கூறி இருந்தார். இதையடுத்து சுப்ரீம் கோர்ட் பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகத்தை கவனிக்க 5 பேர் கொண்ட குழுவை ஏற்படுத்தியது.
இந்த குழுவுக்கு திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி தலைவராக இருப்பார் என்றும், 2 தந்திரிகள் உள்ளிட்ட 4 பேர் உறுப்பினர்களாக இருப்பார்கள் என்றும் அறிவித்தது.
அதன்படி, கோவில் நிர்வாக குழுவினை உருவாக்கும் பணி நேற்று நடந்தது. திருவனந்தபுரம் மாவட்ட நீதிபதி சுனில் தோமஸ் இந்து சமயத்தை சேர்ந்தவராக இல்லாததால் அவருக்கு அடுத்த நிலையில் உள்ள நீதிபதி இந்த பொறுப்பை ஏற்கும்படி கூறப்பட்டது.
எனவே மாவட்ட நீதிபதிக்கு அடுத்த நிலையில் உள்ள மாவட்ட கூடுதல் செஷன் பெஞ்ச் பெண் நீதிபதி இந்திரா, பத்மநாபசுவாமி கோவிலின் நிர்வாக குழு தலைவராக நியமிக்கப்பட்டார்.
இதுபோல உறுப்பினர் குழுவில் தந்திரி பரமேஸ்வரன் நம்பூதிரியும், நாராயணன் பத்மநாபனும் இடம்பெற்றனர். இவர்கள் இன்று கோவில் நிர்வாக பொறுப்பை ஏற்றனர்.
இதுபோல கோவிலின் நிர்வாக அதிகாரியாக ஐ.ஏ.எஸ். அதிகாரி சதீஷ் நியமிக்கப்பட்டார். இவர் தற்போது ஆந்திரா மாநிலத்தில் தேர்தல் அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். வருகிற 8ந் தேதி அவர், கேரளா திரும்பியதும் கோவில் நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்றுக் கொள்கிறார்.
இதையடுத்து இப்போதைய கோவில் நிர்வாக அதிகாரி பூரணசந்திரநாயர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இந்தியா சுதந்திரம் அடைந்த பின்பு , மன்னர் ஆட்சி ஒழிக்கப்பட்ட பின்பு அவர்களின் ஆளுமையில் இருந்த கோவில்கள் அரசின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டது.
1947 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த நடைமுறை அமலுக்கு வந்தது. ஆனால் கேரளாவில் திருவிதாங்கூர் சமஸ்தானத்தை ஆண்ட மன்னர் பரம்பரை வசம் இருந்த பத்மநாபசுவாமி கோவில் நிர்வாகம் மட்டும் அரசின் கைகளுக்கு மாற்றப்படவில்லை.
கேரளாவில் கம்யூனிஸ்டுகள் ஆட்சி பொறுப்பில் இருந்தபோதும்கூட இதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது சுப்ரீம் கோர்ட் நடவடிக்கை காரணமாக திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையினர் கோவிலின் நிர்வாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.