ஹாலிவுட்டுக்கு மிகப் பெரிய சவால் பாகுபலி! - பாராட்டும் சிஎன்என்
பாகுபலி படம் ஹாலிவுட்டுக்கு இந்திய சினிமா விடுத்துள்ள மிகப் பெரிய சவால் என சர்வதேச மீடியாவான சிஎன்என் பாராட்டியுள்ளது.
"இந்திய சினிமா ஒரு வண்ணமயமான பிரமிப்பூட்டும் சினிமாவைத் தந்துள்ளது.. ஆனால் பாலிவுட்டிலிருந்தல்ல. மும்பையிலிருந்து பல நூறு மைல் தொலைவில் உள்ள தென்னிந்திய நகரமொன்றைச் சேர்ந்த ஒரு இயக்குநர், இந்திய பாரம்பரியம் மற்றும் ஹாலிவுட்டின் பிரமாண்ட தொழில்நுட்பத்தை இணைத்து வெற்றிகரமான ஒரு படத்தைத் தந்துள்ளார். அதுதான் பாகுபலி" என்று ஆரம்பமாகிறது சிஎன்என்னின் அந்தக் கட்டுரை!
பெரும் பட்ஜெட்
"பாகுபலி - ஆரம்பம்' இந்தியாவின் மிகப் பெரிய பட்ஜெட் படம்... 40 மில்லியன் டாலர்கள். ஹாலிவுட்டோடு ஒப்பிடுகையில் இது பெரிய தொகையில்லை. ஆனால் இந்தியாவில் இதுவரை அதிகபட்சம் ரூ 25 மில்லியன் டாலர் பட்ஜெட்டே அதிகம் (எந்திரன்).
அசாதாரண படம்
இந்தப் படம் வெளியான நாளிலிருந்து சாதகமான விமர்சனங்கள், ஏகப்பட்ட பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ஹாலிவுட் படங்களுடன் ஒப்பிட்டு பாராட்டி வருகின்றனர். இது அசாதாரண விஷயம்.
அத்தனை பிரமாண்டமும் ஒன்றாக...
பொதுவாக பிரமாண்ட படங்களில் காட்சி அமைப்பு விரிவாக இருக்கும். ஆனால் பாகுபலியில் கதையும் இருக்கிறது என்று கூறியுள்ள இந்தியன் எக்ஸ்பிரஸ், "ஜேம்ஸ் கேமரூனின் கனவு உலகம், ஆங் லீயின் காற்றில் பறக்கும் உத்திகள், பீட்டர் ஜாக்ஸனின் பிரமாண்ட போர்க்களம், ஜேஆர்ஆர் டோல்கினின் கடுங்குரல் எதிர்மறை நாயகர்கள் அனைத்தையும் பாகுபலியில் ஒன்றாகப் பார்க்க முடியும்" என்று பாராட்டுகிறது.
இந்தியப் பாரம்பரியம்
இந்தியப் பாரம்பரிய நன்னெறிக் கதைகளில் வரும் நன்மைக்கும் தீமைக்குமான போரை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம் பார்வையாளர்களுக்கு பெரும் விருந்தே வைத்திருக்கிறது. விஷுவல் எஃபெக்ஸ்ட் ஹாலிவுட்டை விட சில படிகள் உயர்ந்தே காணப்படுகிறது.
மாபெரும் காவியம்
தொழில்நுட்பத்தைப் பொருத்தவரை ராஜமவுலி தந்திருப்பது மாபெரும் திரைக்காவியம்.
மகதீரா, நான் ஈ தந்த ராஜமவுலி, ஹாலிவுட்டுக்கு சரியான சவாலாய் இந்த பாகுபலியைத் தந்திருக்கிறார்," என்று பாராட்டியுள்ளது சிஎன்என்.
இந்தியாவின் பிரபல சினிமா விமர்சகர்கள் சிலரது பாராட்டுகளையும் தனது கட்டுரையில் தந்துள்ளது சிஎன்என்.