பிரபல வக்கீல் ராம் ஜெத்மலானி அந்த வேலைக்கு சரிபட்டு வரமாட்டாராமே?
டெல்லி: ஹை-புரொபைல் வக்கீலான ராம் ஜெத்மலானிக்கும், ஜாமீன் மனுக்களுக்கும் என்னதான் பிரச்சினையோ தெரியாது, மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வழக்குகளில் தனது கட்சிக்காரருக்கு ராம் ஜெத்மலானியால் ஜாமீன் வாங்கி கொடுக்க முடியாமல் போன சோகம்தான் அவரது கேரியரில் கருப்பு புள்ளியாக தொடர்ந்து வருகிறது.
விஐபிகள் கேஸா.., கூப்பிடுங்கப்பா ராம் ஜெத்மலானியை என்று கூறும் நிலையில்தான் ஜெத்மலானி தன்னை முன்னிலைப்படுத்தியுள்ளார். ராஜிவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களை காப்பாற்றியதை தவிர்த்து பார்த்தால் ஜெத்மலானி முக்கிய வழக்குகளில் பெரிதும் சோபிக்கவில்லை என்பதை தெரிந்துகொள்ளலாம்.
கனிமொழி
திமுக தலைவர் மகள் கனிமொழி எம்.பி, மீதான 2ஜி வழக்கில், ஜெத்மலானி ஆஜராகி ஜாமீன் கேட்டுப்பார்த்தார். ம்ஹூம். நடக்கவில்லை. கனிமொழி தனது குழந்தையை பராமரிக்க வேண்டியிருப்பதால் அவரை ஜாமீனில் வெளியிட வேண்டும் என்று சென்ட்டிமென்டாகவும் பேசிப்பார்த்தும் நீதிபதி அசைந்துகொடுக்கவில்லை. இறுதியாக வக்கீல் அல்டாப் அகமது, புண்ணியத்தில், டெல்லி உயர் நீதிமன்றத்தில் கனிமொழிக்கு ஜாமீன் கிடைத்தது.
ஜெகன்மோகன் ரெட்டி
ஆந்திராவின் முன்னணி அரசியல்வாதியான ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி தலைவர் ஜெகன்மோகன்ரெட்டி, வருவாய்க்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில், 2012ம் ஆண்டு ஆந்திர ஹைகோர்ட்டில் ஜாமீனுக்காக ஆஜரானார் ஜெத்மலானி. ஆனால் ரெட்டியை சிறையில் இருந்து வெளியே கொண்டுவர முடியவில்லை.
காஞ்சி சங்கராச்சாரியார்
காஞ்சி சங்கராச்சாரியா, ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியை, கோயில் ஊழியர் கொலை வழக்கு தொடர்பாக, 2004ல் கைது செய்த நிலையில், இதே ராம் ஜெத்மலானிதான் ஜாமீன் கேட்டு வாதிட்டார். சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகள் பறிக்கப்பட்டு சங்கராச்சாரியா கைது செய்யப்பட்டுள்ளார் என்ற வாதம் ஹைகோர்ட்டில் எடுபடவில்லை. இதன்பிறகு மூத்த வழக்கறிஞர் பாலி எஸ்.நாரிமன் உச்சநீதிமன்றத்தில் சங்கராச்சாரியாருக்கு ஜாமீன் பெற்றுக்கொடுத்தார்.
லேட்டஸ்ட் ஜெயலலிதா
இந்த லிஸ்டில் லேட்டஸ்டாக சேர்திருப்பவர்தான் ஜெயலலிதா. இவரது ஜாமீன் மனுவை விசாரிக்க, லண்டனில் இருந்து பறந்து வந்தார் ராம்ஜெத்மலானி. விடுமுறைக்கால அமர்வோ, இவரது வாதத்தை கூட கேட்க தயாரில்லை என்று கூறிவிட்டது. ஹைகோர்ட்டின் வழக்கமான அமர்வோ, ஜெயலலிதா மனுவை அவசர வழக்காக கருத வேண்டும் என்ற ஜெத்மலானியின் கோரிக்கையை புறக்கணித்தது. மேலும், அரசு வக்கீலே ஆட்சபனையில்லை என்று கூறியும் கூட ஜெத்மலானியின் வாதத்தை கண்டுகொள்ளாத ஹைகோர்ட், ஜெயலலிதாவுக்கு ஜாமீனை அளிக்க முடியாது என்று கூறிவிட்டது.