மாமிச தடைக்கு பதிலடி.. பக்ரீத் தினத்தில் காய்கறி விற்பனைக்கு தடை கேட்டு கையெழுத்து இயக்கம்!
பெங்களூர்: சமண மதம் மற்றும் இந்து மத பண்டிகைகளுக்கு மாமிச விற்பனைக்கு சில மாநிலங்கள் தடைவிதித்ததை போல, முஸ்லிம்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, அன்றைய தினம் காய்கறிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று வேடிக்கையாக ஒரு கையெழுத்து இயக்கம் ஆரம்பித்துள்ளார் பெங்களூரை சேர்ந்த ஒரு இஸ்லாமிய இளைஞர். அப்போதுதான், அனைத்து மதத்தவருக்கும் சம உரிமை கொடுத்தது போலாகும் என்கிறார் அந்த வாலிபர்.
சமணர்களுக்காக
சமண மத பண்டிகையை முன்னிட்டு மும்பையில் ஆரம்பித்த மாமிச தடை விதிமுறை, படிப்படியாக, ராஜஸ்தான், ஹரியானா மாநிலங்களுக்கும் பரவியது. விநாயகர் சதுர்த்தி பண்டிகையின்போது பெங்களூரில் ஒரு நாள் மாமிச விற்பனைக்கு மாநகராட்சி நிர்வாகம் தடை போட்டது.
ஒருவாரம் வரை
மராட்டியம், ராஜஸ்தான், ஹரியானா போன்ற மாநிலங்களில், மாமிச விற்பனைக்கு தொடர்ந்து 7 நாட்கள் அல்லது 4 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டது. இஸ்லாமியர்களை சீண்டும் நோக்கில், இந்த தடை விதிக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.
கையெழுத்து இயக்கம்
இதே பாணியில், இஸ்லாமியர் பண்டிகையான பக்ரீத்தின்போது, இந்தியாவில், காய்கறி விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்று, பெங்களூருவை சேர்ந்த ஃபலா ஃபைசல் என்ற இஸ்லாமிய இளைஞர், தனது change.org வெப்சைட் மூலமாக, கையெழுத்து இயக்கம் நடத்தி வருகிறார். கையெழுத்து இயக்கம் மூலம் மத்திய அரசுக்கு தனது கோரிக்கையை வைக்க உள்ளார்.
காய்கறி தடை
"பல்வேறு மத பண்டிகைகளுக்காக மாமிச விற்பனைக்கு தடை விதிக்கப்படும்போது, இஸ்லாமியர்களுக்காகவும், ஒரு தடை அவசியப்படுகிறது. அது காய்கறி தடையாக இருக்கலாம்" என்கிறார் ஃபைசல். ஒருவேளை இந்த கோரிக்கை மிகவும் உச்சபட்சமாக தெரிந்தால், மாற்று மதத்தை சேர்ந்தவர்கள் பக்ரீத்துக்கு எனது வீட்டுக்கு வாருங்கள்.. நான் மாமிச பிரியாணி கொடுத்து உபசரிக்கிறேன் என்றும் ஃபைசல் தெரிவிக்கிறார்.
மேலும் ஒரு வேடிக்கைக்காகவும், மக்களின் உணவு பழக்க வழக்கங்களில் விதிக்கப்படும் தடைகளை விமர்சிக்கவுமே இந்த காய்கறித் தடையை முன் வைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.