உ.பி. பாலியல் வழக்கு: பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை?
லக்னௌ: உத்தரபிரதேசத்தில் இரண்டு சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில், அவர்களின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை செய்ய சி.பி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பதான் மாவட்டம், கத்ரா சதாத் கன்ஞ் கிராமத்தைச் சேர்ந்த 14, 15 வயது நிரம்பிய 2 சிறுமிகள் கடந்த மே 27-ம் தேதி ஒரு கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டு தூக்கில் தொங்கவிடப்பட்டனர். . இதையடுத்து நடந்த மருத்துவ பரிசோதனையில், அந்த சகோதரிகள் இருவரும் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக உத்தரப் பிரதேச போலீஸார் 7 பேர் மீது வழக்குப் பதிவு செய்து இதுவரை 5 பேரை கைது செய்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொதிப்பு
இரு சிறுமிகளுக்கு ஏற்பட்ட இந்த கொடூரம் அந்த மாநிலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல்வேறு அரசியல் கட்சிகளும், பொதுமக்களும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அதைத் தொடர்ந்து மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தலைமையிலான அரசை கலைத்து விட்டு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும் பல்வேறு கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
உண்மை குற்றவாளிகள்
இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டவர்கள் உண்மை குற்றவாளிகளாக இருக்க வாய்ப்பில்லை என்றும், எனவே, அவர்களுக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டிருப்பதாகவும் அம்மாநில காவல்துறை உயரதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
சிபிஐ விசாரணை
இந்த நிலையில் இவ்வழக்கை சிபிஐ விசாரிக்க உத்தரப் பிரதேச அரசு பரிந்துரைத்தது. அதன்பேரில் வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
பெற்றோரிடம் சோதனை
இது தொடர்பாக விசாரணை நடத்தி வந்த சி.பி.ஐ. அதிகாரிகள், இந்த வழக்கு தொடர்பாக கொலை செய்யப்பட்ட சிறுமிகளின் பெற்றோரிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.