தெலுங்கானாவில் மேலும் 2 மாவட்டங்களை இணைக்க டிஆர்எஸ் எதிர்ப்பு- நாளை பந்த்
ஹைதராபாத்: தெலுங்கானாவில் கூடுதலாக 2 மாவட்டங்களை இணைத்து ராயல தெலுங்கானாவை உருவாக்க எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்பு போராட்டத்துக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அழைப்பு விடுத்துள்ளது.
தனி தெலுங்கானா கோரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதியே புதிதாக இரு மாவட்டங்களை இணைக்க எதிர்ப்புத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. தெலுங்கானா மாநிலத்தில் ஏற்கெனவே 10 மாவட்டங்கள் இணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் ராயலசீமாவின் 2 மாவட்டங்களை தெலுங்கானாவில் இணைத்து ராயல தெலுங்கானாவை உருவாக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை முழு அடைப்புப் போராட்டத்துக்கு தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி அழைப்பு விடுத்திருக்கிறது. இதனால் தெலுங்கானாவில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது.