சிறப்பு அந்தஸ்து கேட்டு முழு அடைப்பு - ஆந்திராவில் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்: ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் சார்பில் நடைபெற்ற முழு அடைப்பு போராட்டத்தால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஆந்திர மாநிலத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தொடர்ந்து கோரி வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தில் முழு அடைப்பு போராட்டம் நடத்த கட்சித்தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி அழைப்பு விடுத்திருந்தார்.
அதன்படி நேற்று ஆந்திராவில் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்த போராட்டத்துக்கு இடதுசாரி கட்சிகள் மற்றும் சில அமைப்புகளும் ஆதரவு தெரிவித்தன.
சில குறிப்பிட்ட தடங்களில் மட்டும் தற்காலிகமாக சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தி வைக்கப் பட்டது. மற்றபடி, திருப்பதி - திருமலை உட்பட மாநிலம் முழுவதும் பேருந்து போக்குவரத்து வழக்கம் போலவே செயல்பட்டது.
நகரி பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர், அந்த வழியாக சென்ற ஆந்திர பேருந்தை தாக்கினர். இதனால், அந்த வழியாக ஆந்திர, தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டன. தமிழக பேருந்துகள் அனைத்தும் எல்லைப் பகுதியிலேயே நிறுத்தப்பட்டன.
சென்னை கோயம்பேட்டில் இருந்து ஆந்திரா செல்லக்கூடிய பேருந்துகள் அனைத்தும், பாதுகாப்பு காரணங்களுக்காக பேருந்து நிலையத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டன. நண்பகலில் போராட்டம் ஓரளவு கட்டுப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து, தமிழக மற்றும் ஆந்திர அரசு பேருந்துகள் வழக்கம் போல இயக்கப்பட்டன.
இந்த முழு அடைப்பு போராட்டத்தால் திருப்பதி, காளஹஸ்தி செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.
மாநிலம் முழுவதும் போக்குவரத்து பணிமனைகள் முன் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை.
நடிகை ரோஜா தனது தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதைக் கண்காணித்தார். அவரோடு திரளான தொண்டர்களும் கூடவே சென்றதால் அவர்கள் போன இடமெல்லாம் பரபரப்பு நிலவியது.
முன்னதாகவே ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பல முக்கியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டும், வீட்டு காவலில் அடைக்கப் பட்டிருந்தனர். விசாகப்பட்டணம் மற்றும் விஜயவாடாவில் மட்டும் சுமார் 250 பேரை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.