காவிரியின் பிறப்பிடமான குடகு மாவட்டத்தில் "பந்த்"த்துக்கு ஆதரவு இல்லை!
மடிகேரி: காவிரி நதி பிறக்கும் கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் பந்தால் பாதிப்பு ஏற்படவில்லை. இதேபோல கடலோர கர்நாடக பகுதிகளான மங்களூரு, உடுப்பி போன்றவற்றிலும் பாதிப்பில்லை.
குடகு மாவட்டத்தின் தலைக்காவிரி பகுதியில்தான் காவிரி நதி உற்பத்தியாகிறது. குடகு மாவட்டத்தில் ஒரு பிரிவு மக்கள் தங்களை கர்நாடகாவில் இருந்து பிரித்து தனி மாநிலமாக அறிவிக்க கோரி போராட்டம் நடத்திய வரலாறு கொண்டவர்கள். மேலும், காவிரி பங்கீடு எப்படியானாலும் தங்களுக்கு குடிநீருக்கோ, விவசாயத்திற்கோ எந்த தொந்தரவும் ஏற்படப்போவதில்லை என்பதை அறிந்தவர்கள்.
Bandh fails to affect normal life in Kodagu.
— Kodagu Connect (@KodaguConnect) September 9, 2016
இதுபோன்ற காரணங்களால் குடகு மாவட்டத்தில் கர்நாடக பந்த்திற்கு அதிக ஆதரவு கிடைக்கவில்லை. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் ஓடின. பல கடைகள் திறந்திருந்தன. இதேபோல, கடலோர கர்நாடகாவிலும் பந்த் பாதிப்பை ஏற்படுத்தவில்லை. அப்பகுதிக்கும் காவிரி நதிக்கும் தொடர்பில்லை என்பது ஒரு காரணம்.
ஆனால் வழக்கமாக கண்டுகொள்ளாத வட கர்நாடகாவில் இம்முறை காவிரி போராட்டத்திற்கு ஆதரவு கிடைத்தது. வட கர்நாடக நதிநீர் பிரச்சினைகளுக்காக தெற்கு கர்நாடக மக்கள் சமீப காலமாக ஆதரவு அளித்து போராட்டங்களில் குதித்து வருவது இதற்கு காரணம்.