ஆந்திராவின் 10 மாவட்டங்களில் பந்த் : வெறிச்சோடிய சாலைகள்... இயல்பு வாழ்க்கை பாதிப்பு
ஹைதராபாத்: தெலுங்கானாவுடன் மேலும் 2 மாவட்டங்கள் இணைக்கப் படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று 10 மாவட்டங்களில் இன்று தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சியின் சார்பில் முழு அடைப்பு அனுமானிக்கப் படுகிறது.
ஆந்திராவை பிரித்து தனித் தெலுங்கானா மாநிலம் அமைக்க மத்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு வருகிறது. ஆனால், மத்திய அரசின் இந்த முடிவிற்கு சீமாந்திரா, ராயலசீமா பகுதி மக்கள் கடும்எதிர்ப்பு தெரிவித்துவருகின்றனர்.
தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக, அங்கு தினந்தோறும் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் புதிய தெலுங்கானா மாநிலத்துடன் ராயலசீமா பகுதியைச் சேர்ந்த அனந்தபூர், கர்னூல் ஆகிய 2 மாவட்டங்களை சேர்க்க மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.
இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி கட்சி இன்று முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
வெறிச்சோடிய சாலைகள்...
அதன்படி ஆந்திராவின் தெலுங்கானா பகுதிகளில் உள்ள உள்ள 10 மாவட்டங்களில் இன்று முழு அடைப்பு நடை பெற்ரு வருகிறது. பேருந்துகள் ஓடாததால் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன.
போக்குவரத்து ஊழியர்கள்....
சுமார் 70 ஆயிரம் ஆட்டோக்கள் மற்றும் 10 ஆயிரம் பேருந்துகள் இந்த முழு அடைப்புப் போராட்டத்தில் கலந்து கொள்கின்றன. கிட்டத்தட்ட 58 ஆயிரம் போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இதில் பங்கு பெறுகின்றனர்.
மருத்துவர்கள்....
சுமார் 3,500 மருத்துவர்கள் இந்த பந்த்தில் கலந்து கொள்வதால் அரசு மருத்துவமனைகளில் புற நோயாளிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
மாணவர்கள் போராட்டம்...
மேலும், இன்று அங்கு கடைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் முழுமையாக மூடபட்டு உள்ளன. பள்ளி கல்லூரிகள் மூடபட்டு உள்ளன.ஆங்காங்கே மாணவர்கள் சாலை மறியல் போரட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தேர்வுகள் ரத்து....
பந்த் காரணமாக பல்கலைக் கழக தேர்வுகள் ஒத்தி வைக்கப் பட்டுள்ளன. வெறிச்சோடிய சாலைகளில் பெட்ரோல் பங்க்குகள் மட்டுமே திறந்து வைக்கப் பட்டுள்ளன.
இயல்பு வாழ்க்கை பாதிப்பு....
இன்றைய முழு அடைப்புப் போராட்டத்தினால் தெலுங்கான பகுதில் மக்களின் இயல்புவாழ்க்கை பெருமளவு பாதிக்கபட்டு உள்ளதாகத் தெரிகிறது.