ஏ.டி.எம். மையத்தில் பெண்ணை தாக்கியவன் பற்றி தகவல் கொடுத்தால் ரூ.1 லட்சம் பரிசு: கர்நாடக போலீசார்
பெங்களூர்: பெங்களூரில் ஏ.டி.எம். மையத்தில் பெண் வங்கி அதிகாரியை தாக்கிய நபர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசு அளிக்கப்படும் என்று கர்நாடக போலீசார் அறிவித்துள்ளனர்.
பெங்களூரில் உள்ள ஏ.டி.எம். மையம் ஒன்றில் பணம் எடுக்கச் சென்ற வங்கி மேலாளர் ஜோதி உதய்குமார்(38) மர்ம நபரால் துப்பாக்கி மற்றும் அரிவாளால் மிரட்டப்பட்டார். அந்த நபர் ஜோதியின் தலையில் பல முறை தாக்கிவிட்டு அவரிடம் இருந்து பணம் மற்றும் செல்போனை பறித்துக் கொண்டு ஓடிவிட்டார்.
இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த ஜோதி கெங்கேரியில் உள்ள பிஜிஎஸ் குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் ஆபத்தான கட்டத்தை தாண்டிவிட்டாலும் பூரணமாக குணமடைய பல மாதங்கள் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் சிசிடிவி கேமராவில் பதிவாகியிருந்த அந்த நபரின் உருவம் கொண்ட புகைப்படங்கள் பல்வேறு காவல் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் அந்த நபரை கைது செய்ய 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஜோதியின் செல்போனை அந்த நபரிடம் இருந்து விலைக்கு வாங்கியவர் நேற்று ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் உள்ள இந்துபூரில் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் ஜோதியை தாக்கியவர் குறித்து தகவல் கொடுப்போருக்கு ரூ.1 லட்சம் பரிசுத் தொகை அளிக்கப்படும் என்று கர்நாடக போலீசார் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.