பெங்களூரு குண்டு வெடிப்பு: முன்பே எச்சரித்த மத்திய உளவுத்துறை, அலட்சியம் செய்த கர்நாடகா
பெங்களூரு: சிமி தீவிவாதிகளால் கர்நாடகாவில் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக மத்திய உளவுத்துறை கொடுத்த எச்சரிக்கையை இம்மாநில போலீசார் அலட்சியம் செய்துள்ள விஷயம் தற்போது வெளியே வந்துள்ளது.
கடந்த அக்டோபர் 1ம்தேதி மத்திய பிரதேச மாநிலம் கன்ட்வா மாவட்ட சிறையில் இருந்து சிமி அமைப்பை சேர்ந்த, முகமது அஜாஜுதீன், அம்ஜத், ஆசிம், ஜாகீர் ஹுசைன், மெகபூப் ஆகிய ஐந்து தீவிரவாதிகள் தப்பியோடினர். அந்த தீவிரவாதிகளை கண்காணித்த மத்திய உளவுத்துறை அதிகாரிகள், அந்த ஐந்து பேரும் கர்நாடக மாநிலம் பெல்லாரி மாவட்டம் ஹோஸ்பேட்டை பகுதியில் சுற்றி திரிவதாக கர்நாடக உளவுத்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
தீவிரவாதிகளில் 2பேரை கடைசியாக டிராக் செய்தது செப்டம்பர் மாதத்தில்தான் என்றும், அதன்பிறகு அவர்களை பின்தொடர முடியவில்லை என்றும் மத்திய உளவுத்துறை கர்நாடகாவுக்கு இம்மாத முதல் வாரத்தில் தகவல் தெரிவித்துள்ளது.
தீவிரவாதிகள் கர்நாடகா வந்துள்ளதால் அங்கு அவர்கள் சதிச் செயல்களில் இறங்க கூடும் என்றும் எச்சரிக்கைவிடுக்கப்பட்டிருந்தது. ஆனால் தங்கள் மாநிலத்திற்குள் வந்த தீவிரவாதிகளை மடக்கி பிடிக்க முடியாமல் கோட்டைவிட்டுள்ளது கர்நாடக போலீஸ்.
இந்நிலையில்தான், பெங்களூருவில் நடைபெற்ற குண்டு வெடிப்பும், சிமி அமைப்பினர் நடத்தும் குண்டு வெடிப்பும் ஒரே போன்று இருப்பது தெரியவந்துள்ளது. சிமி வழக்கமாக நடத்தும் பைப் குண்டு தாக்குதல்தான் பெங்களூரிலும் நிகழ்த்தப்பட்டுள்ளது. அல்-உம்மா இயக்கத்தின் மீது போலீசாருக்கு சந்தேகம் இருந்தாலும், அவர்கள் இந்து மத தலைவர்களை கொல்லும் நோக்குடன் செயல்படுபவர்கள் என்பதால், இந்த தாக்குதலில் அவர்களுக்கு தொடர்பு இருக்க வாய்ப்பில்லை என்று போலீஸ் கருதுகிறது.