பெங்களூரு குண்டு வெடிப்பு: காயமடைந்த மூவரும் சிகிச்சை முடிந்து டிஸ்சார்ஜ்
பெங்களூரு: பெங்களூரு குண்டு வெடிப்பில் காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த மூன்று பேரும் மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.
டிசம்பர் 28ம்தேதி பெங்களூரு எம்ஜிரோடு சர்ச் தெரு பகுதியில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் பவானிதேவி என்ற 38 வயது சென்னை பெண் பரிதாபமாக உயிரிழந்தார். பவானி தேவியுடன் நடந்து வந்து கொண்டிருந்த அவரின் மைத்துனர் மகன் கார்த்திக் உடலுக்குள்ளும் இரும்பு துண்டுகள் புகுந்தன. மல்யா மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட கார்த்திக்கின் உடலுக்குள் இருந்து சுமார் ஒரு இன்ச் நீளமுள்ள இரும்பு துண்டு அகற்றப்பட்டது.
அதேபோல சாப்ட்வேர் இன்ஜினியரான சந்தீப் என்பவரும் இந்த தாக்குதலில் காயமடைந்தார். தனது நண்பர்கள் சிலருடன் இரவு சாப்பிட எம்ஜிரோடு வந்தபோது அவரும் குண்டு வெடிப்பில் சிக்கினார். சந்தீப்பின் நண்பர் வினய் என்பவருக்கும் குண்டு வெடிப்பில் காலில் காயம் ஏற்பட்டது. சந்தீப், வினய் மற்றும் அவர்களது நண்பர்கள் குண்டு வெடிப்பு நடந்த இடத்தில் இருந்து சுமார் 15 அடி தொலைவில் நின்றபடி பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது குண்டு வெடித்த இடத்துக்கும், இந்த நண்பர்களுக்கும் நடுவே பவானிதேவியும், கார்த்திக்கும் நடந்து சென்றுள்ளனர். அதே நேரத்தில் குண்டு வெடித்ததால் குண்டில் இருந்து புறப்பட்ட இரும்பு பொருட்கள் பவானியின் மண்டை ஓட்டை உடைத்து உள்ளே புகுந்து அவரது மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களை துண்டாக்கியது. இதனால் தலையில் இருந்து ரத்தம் ஆறாக பெருக்கெடுத்து தெருவில் ஓடியது.
இவ்வாறு பவானி தேவி குறுக்கே வராவிட்டால் சந்தீப் உள்ளிட்ட நண்பர்கள் அந்த தாக்குதலை தங்களது உடலில் ஏற்றுக்கொண்டிருக்க வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது. குறுக்கே நடந்து சென்ற பவானி தாக்குதலின் முழு பாதிப்பையும் அவருக்குள் ஏற்று உயிரை விட்டுள்ளார் என்பதும் விசாரணையில் தெரியவந்தது.
இருப்பினும் சந்தீப் காலுக்குள் 2 செ.மீ நீளமுள்ள இரும்பு துண்டு புகுந்திருந்தது. ஹோஸ்மட் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அவருக்கு ஆபரேஷன் மூலம் இரும்பு துண்டு அகற்றப்பட்டது. வினய்க்கு காலில் லேசான காயம் ஏற்பட்டிருந்தது. காயமடைந்த மூவருமே அவரவர் சிகிச்சை பெற்ற மருத்துவமனைகளில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.